வாழ்வில் உயர்வுகொள்!

ஏப்ரல் 16-30

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

சுயமரியாதைகொள் தோழா! – நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! – (சுய)
உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், – நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்; துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் – சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! – சிலர் பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)

சேசு முகம்மது என்றும்! – மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,
பேசி வளர்க்கின்ற போரில் – உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்! காசைப் பிடுங்கிடுதற்கே – பலர்
கடவுளென் பார்! இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! – கெட்ட
கோவிலென்றால்ஒரு காதத்தில் ஓடு! (சுய)

கோவில் திருப்பணி என்பர் – அந்தக் கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ தாயென்ற பாவனை யோடும் – உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)
கடவுள் துவக்கிக் கொடுத்த – பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், – அந்தக் கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் – ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் – வேறு
கதைகளி னாலும் சுகங்கண்டதுண்டா? (சுய) அடிமை தவிர்ந்ததும் உண்டோ? – அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? – அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் – ஏழைக் கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே – தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)

உழைக்காத வஞ்சகர் தம்மை – மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக் கும்போதி லேயே – நாட்டில்
விளையாடும் திருடரைச் ‘சாமி’என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை – ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் – இவர் முதலெழுத்தோதினும் மதியிருட் டாகும்! (சுய)

————————–

40,600 பாடல் வரிகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொத்தம் 40 ஆயிரத்து 600 பாடல் வரிகள் பாடியுள்ளார். அவை கீழ்க்காணும் வகையின என்று ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிவித்துள்ளனர்.

அகவல் பாக்கள்     –    12,808 அடிகள்
விருத்தப் பாக்கள்    –    12,283 அடிகள்
சிந்து இசைப்பாக்கள்  –    8,705 அடிகள்
வெண்பாக்கள்            –    6,086 அடிகள்
பிறவகைப் பாக்கள்    –  718 அடிகள்
_    _ _ _ _ _ _ _ _

40,600 அடிகள்          
_    _ _ _ _ _ _ _ _

(தகவல்: சு.அறிவுக்கரசு எழுதிய இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் நூலிலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *