விட்டு விடுதலையாகி….

மார்ச் 01-15

சிறப்புச் சிறுகதை – விட்டு விடுதலையாகி….

– கவின் மலர்

கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடிமுள் நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும் என்று வயிறோடு பேசினாள்.

வயிறோ பலவித சப்தங்களை எழுப்பி தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஏதாவது நொறுக்குத்தீனி அல்லது வாழைப்பழம் இருக்கிறதா என்று அறைக்குப் போய் பார்த்தாள். அறைக்குள்ளே  காலையில் அய்ம்பது பைசா சில்லரை இல்லாததால் பக்கத்துக் கடைப்பையன் கொடுத்த ஒரே ஒரு ஹால்ஸ் மிட்டாய் மட்டுமே தேடியதில் தட்டுப்பட்டது.

மஞ்சு கட்டிலில் அமர்ந்து ஷிட்னி ஷெல்டன் நாவலை வாசித்துக் கொண்டிருந்தாள்.

மஞ்சு! பழம் வச்சிருக்கியா?

ஒன்னுதான்டி வச்சிருந்தேன். இப்போதான் அதையும் சாப்பிட்டேன். முன்னமே கேட்டிருக்கலாமே. ஷேர் பண்ணியிருக்கலாமே!

சரி விடு! இந்த சுதா பாரேன்… தினமும் நைட் லேட்டா வர்றா. எனக்குப் பசி தாங்க மாட்டேங்குது.

நீ எதுக்கு அவளுக்காக வெயிட் பண்றே? நீ பாட்டுக்குச் சாப்பிட வேண்டியதுதானே? 8 மணிக்கு வாங்கி வைக்கிற சாப்பாட்டை தினமும் பத்தரை பதினோரு மணிக்குச் சாப்பிட்டா ஆறி அவலா போயிடாதா? நீ வெயிட் பண்ணுவேன்னு அவளுக்குக் கொஞ்சமாவது பொறுப்பிருக்கா?. தினமும் லேட்டாத்தான் வர்றா. ஹாஸ்டல்ல பத்துமணிக்கு கேட் மூடிடுவாங்கன்னு தெரிஞ்சும் ஆடி அசைஞ்சு வர்றா. தினம் வார்டன் ஆண்ட்டிகிட்ட திட்டும் வாங்குறா. அப்படி எங்கதான் போயிட்டு வர்றா?

மஞ்சுவுக்குச் சொல்லும்போதே கோபம் கொப்பளித்தது. சிவந்த அவளது கன்னங்கள் மேலும் சிவந்துபோயின. அவ சரியில்ல கவிதா. நீ கேட்க மாட்டேங்குற! என்றாள்

அவ ராஜ் கூட ஆன்லைன்ல சாட் பண்ணிட்டு வர்றா. நம்ம என்ன சொல்ல? அவளும்தான் என்ன செய்வா? அவன் எங்கேயோ இருக்கான். இவ இங்கே இருக்கா? எப்படித்தான் பேசிப்பாங்க பின்னே. அதனால்தான் நான் ஒன்னும் சொல்றதில்ல.- கவிதா பெருமூச்சுவிட்டாள்.

அப்போ காத்துக்கிட…! என்கிட்ட வந்து பசிக்குதுன்னு புலம்புனே… மகளே கொன்னுடுவேன்..

கவிதா அறையைவிட்டு வெளியே வந்து ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டே வந்தவள் பிடித்த பாட்டு வர கொஞ்சம் ஒலியளவைக் கூட்டினாள்.

கேன் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் த வால்யூம் ப்ளீஸ்?

ஏதோ ஓர் அறைக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்க, இவளுக்கு எரிச்சல் வந்தது. பட்டென்று டிவியை அணைத்தாள்.

இதே எழவு எப்பப் பார்த்தாலும் இவளுகளோட.. இவளுகளுக்குத் தூக்கம் வந்துரும் 9 மணிக்கெல்லாம். இழுத்துப் போர்த்திட்டுப் படுத்துருவாளுக. அதுக்கு மத்தவங்களும் ஒன்னும் பண்ணக்கூடாது. சே..! என்ன ஜென்மங்களோ? ஒரு பிடிச்ச பாட்டை நிம்மதியா கேட்க முடியுதா? இந்த டிவில பத்து மணிக்கு மேலதான் பிடிச்ச பாட்டா வேற போட்டுத்தொலைப்பானுங்க.  மனசுக்குள் திட்டியவாறே மணியையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். பக்கத்து அறை நிர்மலா எட்டிப் பார்த்தாள்.

நல்ல பாட்டு பாடுச்சே! ஏன் நிப்பாட்டுனே கவிதா?

நானெங்கே நிப்பாட்டுனேன். எவளோ நிப்பாட்டச் சொன்னா. நிப்பாட்டுனேன். நீ வேற கடுப்பைக் கிளப்பாதே! போய்த் தூங்கு போ- எரிந்து விழுந்தாள் கவிதா..

லூஸாடி நீ? எவ நிப்பாட்டச் சொன்னது?

தேவி குரல் மாதிரி இருந்துச்சு

இங்க கொண்டாங்குறேன்.. ரிமோட்டைக் குடு.. பாய்ந்து வந்து கவிதாவின் கையிலிருந்த ரிமோட்டைப் பிடுங்கி டிவியை ஆன் செய்தாள் நிர்மலா. என்ன சத்தம் இந்த நேரம்? பாடிக் கொண்டிருந்தது.

என்ன அருமையான பாட்டு! ரசனை கெட்ட… நிர்மலா திட்டிக்கொண்டே ரிமோட்டை முடுக்க, எஸ்.பி.பியின் குரல் பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது.

மீண்டும் கேன் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் தெ வால்யூம்? என்ற அசரீரி ஒலித்தது.

முடியாது. அயம் ஸாரி. எனக்கு இந்தப் பாட்டுப் பிடிக்கும். பார்க்கணும். நிர்மலா விடைத்துக்கொண்டு சொன்னாள். தேவி அறையிலிருந்து வெளியே வந்தாள். ப்ளீஸ். திஸ் ஈஸ் டூ மச். வால்யூம் ரெட்யூஸ் பண்ணுங்க ரெண்டுபேரும் என்றாள்.

முடியாது! இந்தப் பாட்டு முடிஞ்சாத்தான் என்றாள் நிர்மலா. மஞ்சு அமைதியாய் உள்ளிருந்து ஷிட்னி ஷெல்டனிலிருந்து தலையை எடுக்காமல் காதுகளை மட்டும் தீட்டி வைத்துக்கொண்டாள். கவிதா கலவரமாய் பார்த்தாள். நிம்மி! சண்டை போடாதே! விட்டுரு. எத்தனை தடவை என்ன சத்தம் இந்த நேரம் கேட்டிருப்போம். இன்னிக்கு விட்டுக்குடு என்றாள் கவிதா

போடீ இவளே! என்று அழிச்சாட்டியமாய் நின்ற நிர்மலா பாட்டு முடிந்தவுடன்தான் ஒலியளவைக் குறைத்தாள். கவிதா மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தேமுக்கால். சுதா வரவில்லை இன்னும். என்னதான் பேசுவாள் ராஜூவிடம்?. இப்படிப் பேசுகிறாளே? பிரவுஸிங் செண்டரே கதியென்று கிடக்கிறாள். இப்படி  நினைத்துக் கொண்டிருந்தபோதே அழைப்பு மணி ஒலிக்க, சென்று கதவைத் திறந்தாள். சுதாதான். சாப்டியாடி? என்றாள் நுழைந்தவுடன்.

இல்லை. உனக்காகத்தான் வெயிட்டிங்

அச்சச்சோ..! சரி வா! சாப்பிடுவோம்

சாப்பாட்டை எடுத்து வந்து அமர்ந்தாள் கவிதா. மஞ்சு உள்ளிருந்து கேட்டாள்.. என்ன பிரிட்ஜ்ல வச்சது மாதிரி ஜில்லுன்னு ஆயிடுச்சா?

இருவரும் பதில் சொல்லாமல் சாப்பிட்டார்கள். மஞ்சு உள்ளிருந்து கேட்டாள். சுதா! தினமும் உன்னால இவ சாப்பிடாம பட்டினி கிடக்கிறா? கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா? சுதா பதிலேதும் சொல்லவில்லை. அறைக்குள் நுழைந்து மின்விளக்கை அணைத்து உடை மாற்றத் தொடங்கினாள்.

படிக்கிறேன்ல.. நீ பாட்டுக்கு லைட் ஆஃப் பண்ணினா என்ன அர்த்தம்

டிரஸ் மாத்துறது தெரியலையா?

கவிதாவுக்கு இதற்கொரு சண்டை வந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. இந்த ஹாஸ்டலில் எடுத்ததற்கெல்லாம் சண்டையாய்த்தான் கிடக்கிறது. காலையில் எழுந்து குளிக்கப் போகையில் நான்தான் முன்னாடியே பக்கெட் வைத்தேன் என்று சண்டை. டாய்லெட் போய்விட்டு சரியாய் பிளஷ் பண்ணவில்லை என்று ஒரு சண்டை. தலையைச் சீவி முடியை அறைக்குள்ளேயே போட்டுவிடுவதற்கு, சாப்பாட்டுக்கு கியூவில் நிற்கையில், டிவி பார்க்கையில் சேனலுக்கு, தூக்கம் வந்தால் லைட்டை ஆஃப் பண்ணச்சொல்வதற்கு, கும்பலாக அமர்ந்து பேசினால் வரும் ஹோவென்ற சிரிப்புக்கூச்சலுக்கு என்று எல்லாவற்றுக்கும் சண்டைதான்.

தொலைப்பேசி மணி ஒலிக்க, எடுத்தாள் கவிதா. வார்டனின் குரல். கவிதா! சுதாவுக்கு கால். மணி பத்தேமுக்கால். பத்து மணிக்கு மேல கால் வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? சுதா கிட்டச் சொல்லு. சரியா? என்றாள் வார்டன் அதட்டலாக.

சுதா வந்து ரிசீவரை வாங்கினாள். ம்.. சாப்பிட்டுட்டேன் ராஜூ. நீ…?…..ம்….சரி…சரி…டேக் கேர்…

கவிதா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்பத்தானே சாட்ல பேசிட்டு வர்றே? அப்புறமென்ன திரும்ப கால்? ஆண்ட்டி வேற கன்னாப் பின்னான்னு திட்டுது. மொபைல்ல கூப்பிட்டாத்தான் என்ன?

இல்ல கவிதா! பிரான்ஸ்லேர்ந்து இங்கே லேண்ட்லைனுக்குப் பேசினா ஃப்ரீ. மொபைலுக்குப் பேசினால் பைசா அதிகம். அதான் ராஜூ லேண்ட்லைனுக்குப் பண்றான். சரி விடு! எல்லாம் இன்னும் நாலு நாள்தானே? நான் தான் பிரான்ஸ் போயிடுவேன்ல என்றாள்.

கவிதாவுக்குச் சட்டென்று முகம் வாடியது. சுதா போகப் போகிறாள். ராஜூ இருக்கும் பிரான்ஸுக்கே போகப் போகிறாள். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. ராஜூ பிரான்ஸ்  போவதற்குமுன் சுதாவைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டுத்தான் போனான். ஹாஸ்டலில் கவிதாவைத்தவிர யாருக்கும் தெரியாது. இவள் தான் சுதா தரப்பில் சாட்சிக் கையெழுத்து போட்டாள். பரம ரகசியமாய் இருவரும் இதை வைத்திருந்தனர். ஒருத்திக்குத் தெரிந்தாலும் அவ்வளவுதான். ஏனோ திடீரென மனம் கனத்துப்போனது கவிதாவுக்கு.

நீ போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சுதா?

சுதா சிரித்தாள். கொஞ்ச நாள் கஷ்டப்படுவே.. அப்புறம் போகப்போக வேற எவளாவது ஹாஸ்டலுக்குப் புதுசா வருவா. அவ பிரண்டானவுடன் என்னை மறந்துடுவே! என்றாள். சுதா கவிதாவிடம் ஏன் அப்படி ஒட்டிக்கொண்டாள்? இருவருக்குமே தெரியாது. அவள் ஹாஸ்டலில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால் நெடுநாள் பழகியவள் போல் கவிதாவிடம் எல்லா விஷயங்களையும் சொன்னாள். ராஜுவைக் காதலிக்கும் விவரம் தெரிந்து அப்பா அடித்தது முதல், அம்மா அவளை இரண்டு செட் துணிகளோடு எங்காவது அவனோடு போய் பிழைத்துக்கொள் என்றதையும், அண்ணன்,  அண்ணி அவளைக் கரித்துக்கொட்டியதையும், அண்ணனின் குழந்தையைப் பிரிய முடியாமல் பிரிந்து வந்ததையும் அழுதுகொண்டே கதைகதையாய் ஒரு நாள் அவள் கூறியபோது கவிதா அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னாள். அன்று பிடித்த கையை இன்றுவரை விடவில்லை அவள்.

ராஜூதான் அவளை இந்த ஹாஸ்டலில் வந்து சேர்த்துவிட்டான். அவன்தான் அட்வான்ஸ் கொடுத்து, துணிமணிகள், வாளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்தான். சுதா ஹாஸ்டலில் சேர்ந்து ஒரே மாதத்தில் ராஜூவை அவன் வேலை பார்த்த கம்பெனி பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  அனுப்பியது. அவனுக்கு அவளை விட்டுவிட்டுப் போக மனசில்லை. இருவருமே ரகசியமாய்  மணமுடிக்க முடிவெடுத்தார்கள். திருமணத்தைப் பதிவு செய்யக்  கிளம்புகையில் அறைக்குள் அமர்ந்து அழுதாள் சுதா. அவளைத் தேற்றி அழைத்துக் கொண்டு போனாள் கவிதா. பதிந்து முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்கள்.

சுதாவைப் பார்த்துக்கோங்க… அவளுக்கு யாருமில்லை. என்னை மட்டும் நம்பி வந்தா இவ. நானும் அவளை விட்டுட்டு நாளைக்குக் கிளம்புறேன். எவ்வளவு சீக்கிரம் அவளை அங்கே அழைச்சுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைச்சுப்பேன். ஆனாலும் எனக்குக் கஷ்டமா இருக்கு. நீங்கதான் அவளைப் பார்த்துக்கணும்  ராஜூ கவிதாவிடம் கெஞ்சுவதுபோல் தழுதழுத்த குரலில் சொன்னான்.

அவனை வழியனுப்ப விமான நிலையத்திற்கு கவிதாவும் போயிருந்தாள். அவன் மீண்டும் மீண்டும் சுதாவை கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அன்றிலிருந்து சுதாவுக்கு கவிதாதான் எல்லாம். ஒரு நாள் இரவு கவிதா யதேச்சையாய் கண்விழித்தபோது தன் கட்டிலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்  சுதா. அருகில் சென்று அவள் தலையைக் கோதிவிட்டாள். வெடித்து அழுதாள் சுதா. என் அண்ணன் குழந்தை மகி.. .என் மேல் எத்தனை பாசமா இருப்பான் தெரியுமா? அவளைக்கூட விட்டுட்டு வந்துட்டேன் கவிதா! அவன் பிறந்தநாள் இன்னிக்கு. எனக்கு மகி ஞாபகமாவே இருக்கு என்று அக்குழந்தையின் படத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். இப்படி அடிக்கடி மகியின் படத்தை எடுத்துப்பார்த்து கண்ணீர்விடுவது சுதாவின் வழக்கமாகி இருந்தது.

குடும்பத்தைப் பிரிந்தது அவளை ரொம்பவே வாட்டியதாக கவிதாவுக்குப் பட்டது. எவ்வளவு பாசமிருக்கிறதோ அதேபோல குடும்பத்தினர்-மீது பயமும் அவளுக்கிருப்பதாக கவிதா நம்பினாள். அதற்கேற்றவாறு ஒரு நாள் சுதாவும் கவிதாவும் தி.நகருக்கு சுடிதார் வாங்கச் சென்றபோது நன்றாகப் பேசிக்கொண்டே வந்த சுதா திடீரென முகம் இருண்டாள். கவிதாவின் கைகளை அவசரமாகப் பற்றினாள். அருகிலிருந்த கடை ஒன்றினுள் நுழைந்தாள். அது பெர்ஃப்யூம்கள் விற்கும் கடை. கவிதா விழித்தாள். அண்ணன்… அண்ணன்.. ரகசியமாய் கிசுகிசுத்தாள் சுதா. எங்கடி.? .எங்கே?

பரபரத்தாள் கவிதா. வெளிய ரோட்டில் பார்த்தேன். அதான் இங்க இந்தக் கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன்..  சுதாவின் குரல் நடுங்கியது. பயத்தில் நா குழறியது. வியர்வை ஆறாய் ஓடியது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்-கொண்டது. என்னை மறைச்ச மாதிரி நின்னுக்கோ ப்ளீஸ்..! பயமா இருக்கு..! – இந்த வார்த்தைகளைத்தான் அவள் சொல்லியிருப்-பாள் என்று கவிதா யூகித்தாள். அந்தளவிற்கு நாக்கு குழறியது அவளுக்கு. அவளை மறைத்தமாதிரி நின்றுகொண்டு பெர்ஃப்யூம் பயன்படுத்தும் பழக்கமேயில்லாத கவிதா அடைக்கலம் தந்த கடைக்கு நன்றிக்கடனாக ஒரு பெர்ஃப்யூம் வாங்கினாள். சுதாவின் கைகள் கவிதாவின் தோள்களை இறுகப் பற்றியிருந்தது. மிகவும் அசாதாரணமாக அச்சம் அந்த ஸ்பரிசத்தில் இருந்ததை உணர்ந்தாள் கவிதா.

அவள் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. கால்கள் தள்ளாடின. அதோ போறார்…! பதறினாள் சுதா. அவள் காட்டிய திசையில் நீலநிறச் சட்டை அணிந்த இளைஞனொருவன் போய்க்கொண்டிருந்தான். ஒன்னுமில்ல….

பதட்டப்படாதே.! அவர் உன்னைப் பார்க்கலை.. என்று அவளை ஆசுவாசப்படுத்தினாள் கவிதா. கண்ணுக்-கெட்டிய தூரத்தில் ஒரு புள்ளியாய் நீலநிறச் சட்டை மறையும் வரை காத்திருந்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்த வேகத்தில் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆட்டோவுக்குள் பாய்ந்தாள் சுதா. ஆட்டோ ஹாஸ்டலுக்குப் பறந்தது. அன்று முழுவதும் படபடப்பு அடங்கவில்லை சுதாவிற்கு. அப்போதிலிருந்து வெளியே வருவதை அறவே தவிர்த்தாள். அருகில் உள்ள கடைக்கு வரக்கூடப் பயந்தாள். அவள் இப்படிப் பயப்படுவது தேவையற்றது என்றே தோன்றியது. ஏதோ ஒரு நாள் அவளுடைய அண்ணனை சாலையில் பார்க்க நேர்ந்ததால் தினமுமா அப்படியாகுமென்று சில சமயம் சுதா மீது கவிதாவுக்குக் கோபம்கூட வந்தது. எத்தனை சொன்னாலும் கேட்காமல் சுதா ஹாஸ்டலுக்குள் ஹவுஸ் அரெஸ்ட் ஆனவள் போல் கிடந்தாள். வெளியே வர மறுத்தாள். பிரான்ஸ் போவதற்குள் தன் வீட்டார் கண்ணில் பட்டுவிட்டால் தன் கதி என்னாவது என்று அரற்றிக்கொண்டே இருந்தாள். ஆனால் மாலையானதும் பக்கத்திலுள்ள பிரவுஸிங் செண்டருக்குப் போவதற்கு மட்டும் தவறுவதேயில்லை அவள்.

ஒரு நாள் கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மின்சாரமில்லை. அன்றைக்கு அவள் தவித்த தவிப்பைக் கண்டு கவிதாவுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் பாவமாய் இருந்தது.

ஒருநாள்தானே சுதா? ராஜூவோடு ஒருநாள் பேசாம இருக்க முடியாதா?

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *