புதுப்பாக்கள்

மே 16-31

மாறாத் தமிழன்…

சொந்த நாட்டை விட்டு
வேலைக்குப் போன
ஒரே ஊரில்
இரு வேறு நபர்கள்

தொடர்கின்றன
பகலிரவு – வேலையும்
குறைவான சம்பளமும்

நீந்திச் சாகின்ற
வாழ்க்கைக்கு – ஒன்றுபட்ட உழைப்பு

ஓர் அறையில்
மாற்றிக் கொள்கின்றனர்
இருவரின் ஆடைகளையும்,
உள்ளாடை தவிர

தொட்டால் தீட்டென்றவன்
ஒரே பானையில் சமைத்து
உணவினை உண்ணுகின்றான்

ஜாதித் தலைவர் குரு பூஜைக்கு –
ஒருவருக்குத் தெரியாமல்
ஒருவர் நிதிஉதவி செய்கின்றனர்

எந்த தேசம் சென்றாலும்
உளுத்துப்போன ஜாதிவெறியர்கள்
நடமாட்டம் அதிகமாகவே உள்ளது
முகத்திரை இட்டபடி….

வேண்டுகோளுக்கிணங்க – சிலர்
தூண்டுகோலுக்கிணங்க
அரங்கேறுகின்றன –
ஆடிக்கொருதரம் –
அமாவாசைக்கொரு தரம் – கோவில்
திருவிழாவின் பெயரில்
கலவரம்…

ஊருக்குள் நடுவே
முளைக்கின்றன
ஜாதிச் சுவர்கள்…
இங்குமட்டுமில்லை
வெளிநாடுகளிலும் _ ஜாதிச்
சங்கங்கள் சந்திக்கின்றன
சாவுகளை – காக்கும்
சாமிகள் கேட்கின்றன
காவுகளை…

எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு எங்கே ஜீவிக்கப்போகிறது?

— வாலிதாசன்
முகவை-15

முதுமை எல்லோர்க்கும் பொதுமை

கைவைத்து முறுக்கியதால்
கருப்புதிர்ந்ததோ
நரைத்த மீசை

தலைமுடியின் ஆட்சி
கலைக்கப்பட்டது
வழுக்கை

முகத்திலும் தெரிகிறது
ரேகைகள்
முதுமை

பல்லென்னும் தொடர்வண்டி
தடம்புரண்டது
பொக்கைவாய்

ஆறில் படித்தவர்
அறுபதிலும் படிக்கிறார்
அனுபவப் படிப்பு

கனவு இல்லம் கண்டவர்க்கு
பிள்ளைகள் கண்டனர்
முதியோர் இல்லம்

வளரும் போது தந்தை காட்டுகிறார்
வளர்ந்தபின் மகன் காட்டுகிறான்
கையசைப்பு (டாடா)

ஒருவருக்கு வந்த ஓலை
எல்லோரும் பயப்படும் ஓலை
மரண ஓலை

வாங்க முடியுமென்றால்
வாங்குவார் வயது முதிர்ந்தோர்
மரணத்தை

-முசிறி மலர்மன்னன்

வாழ்க மக்களாட்சி

முன்ளிவாய்க்காலில்
முடிந்து போகவில்லை
முளைத்துக் கொண்டிருக்கிறது…!

நந்திக் கடலலைகள்
நிச்சயம் ஒருநாள் எழும்
ஆழிப் பேரலையாய்

இந்து மாக்கடலில்
கிடைத்துக்
கொண்டேயிருக்கிறது…
இந்திய மீனவர் சடலம்

மக்கள் சக்தி
மாபெரும் சக்தி
வழிகாட்டுகிறது எகிப்து

பணமுதலைகளின் வாயில்
அப்பாவி ஏழைமக்கள்
வாழ்க மக்களாட்சி

– ம.கணேசன்,
மன்னார்குடி

அழித்துவிட்டது
குளிர்காய்ந்தான்
அர்ச்சகன்
மார்கழி பஜனை
வேலுண்டு வினையில்லை
உண்டியல் திருட்டு
சோறு போடுமா
தமிழ்?
தீனி மாடுகள்

ஆக்கிரமிப்பில்
ஆரியம்
தோல் வலிமை

தொடர்கிறது
உரிமை மீறல்
கருவரை மறுப்பு

கதவைத்திற காற்றுவரட்டும்
புழுக்கத்தில் சாமியார்

கொழுக்கிறது
தண்டச்சோறுகள்
தட்சணைகள்

மறைக்கிறது
வெள்ளை உடை
கறுப்புப் பணம்

அடிமைகளிடம்
அடிமையாகிறோம்
அய்.பி.எல்
சேவை செய்வது
சூத்திரன் கர்மா கருமம் கருமம்

மண்ணைக் கவ்வும்
மண்டைக் கொழுப்பு
எழுவோம் திமிறி

பிறர்மனை நோக்கான்
திருக்குறள்
வெறுக்கும் பார்ப்பனியம்

ஒருவனுக்கு ஒருத்தி
வழக்கு கீதை சத்தியம்

இறுதியாய் ஒலித்தது
முள்ளிவாய்க்காலில்……
பிதாவே இவர்களை…..!

சுவையறியுமா
தத்துப்பிள்ளை?
தாய்ப்பால்

படைக்கவில்லை
காக்கவில்லை
அழித்துவிட்டது

புதுவை ஈழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *