அய்(யர்) அய்(யங்கர்) டெக்னாலஜியில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் எதிர்த்தெழுந்த மாணவர் எழுச்சி!

ஜூன் 16-30

அய்(யர்) அய்(யங்கர்) டெக்னாலஜியில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் எதிர்த்தெழுந்த மாணவர் எழுச்சி!

கோயிலின் கருவறைக்குச் சமமாக தங்களைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது என்று ஆரியப் பார்ப்பனர்கள் புனிதங்காத்த ஓர் இடம் அய்.அய்.டி. வளாகம்.

50 ஆண்டுகளுக்கு முன் வானொலி, அஞ்சல் துறை, இரயில்வே, தந்தி, தொலைபேசித் துறைகள், அய்.ஏ.எஸ். பதவிகள், ஒட்டுமொத்த மத்திய அரசின் உயர்பதவிகள் அனைத்தையும் தங்களுக்கென்றே அபகரித்துக் கொண்டவர்கள் அல்லவா அவர்கள்.

அப்படிப்பட்ட ஆதிக்கக் கோட்டையை இடஒதுக்கீடு என்ற அணுகுண்டுமூலம் தகர்த்து, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நுழைய வழிவகுத்தவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும். எனவே, ஆரிய கும்பலுக்கு எப்போதும் இவர்கள் இருவரும் எரிச்சலையேத் தந்தனர். அதனால், அவர்கள் பெயரை, அவர்களின் தொண்டை, அவர்களின் சிறப்பை எப்படியெல்லாம் மறைக்க, திரிக்க, குறைக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருவது அவர்களின் வாடிக்கை.

அப்படிப்பட்ட இருவர் பெயரில், அவர்கள் புனிதங்காத்த, அவர்களின் ஆதிக்க வளாகத்திற்குள் வாசகர் வட்டம் வைத்து, இவர்களின் கொள்கைகளை, இலக்குகளை, பெருமைகளைப் பேசுவதோடு, இவர்கள் பெயரில் அமைத்த அமைப்பின்மூலம், அவர்கள் செய்யும் அநியாயங்களை, ஆதிக்கங்களை, மோசடிகளை கண்டிக்க, எதிர்க்க, கிளர்ச்சி செய்ய முற்பட்டால் சும்மா இருப்பார்களா?

சராசரிப் பார்ப்பனர்களே ஆதிக்க முனைப்பிலே செயல்படக் கூடியவர்கள் என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் அங்கு ஊடுருவியுள்ள நிலையில், ஆதிக்க வெறியோடு அவர்கள் அங்குச் செயல்படுவார்கள் என்பதை விளக்க வேண்டியதே இல்லை. அதுவும், மத்திய ஆட்சி அவர்கள் கையில் என்ற நிலையில் மதக் கொள்கையைத்தானே செய்வர். அதன் விளைவுதான் இன்றைய போராட்டம், எழுச்சி, கிளர்ச்சியெல்லாம்.

மனிதர்களில் பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்று பிரித்து, ஒதுக்கி தீண்டாமையைக் கடைபிடித்த அவர்களுக்கு, படிப்பில்கூட சூத்திரப் படிப்புகளைப் பிரித்து ஒதுக்கி வைத்தனர். ஆனால், அப்படிப்புகள் (ஆங்கிலம், பொருளாதாரம், வளர்ச்சிக்கான கல்விகள்) 2016இல், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அய்.அய்.டி. வளாகத்திற்குள் கற்பிக்கப்பட பஞ்சமர்களும், சூத்திரர்களும் அங்கு நுழைய வாய்ப்புக் கிடைத்தது.

ஆம், பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம் வளர்ச்சிக்கான கல்விகள் போன்ற படிப்புகளை அவர்கள் பஞ்சமர், சூத்திரர்களுக்காகவே ஒதுக்கி வைத்தனர். கலைக்கல்லூரிகளும் பஞ்சமர் சூத்திரர் கல்லூரிகளாகவே செயல்படுகின்றன. அப்படிப்புகள் அவர்கள் புனிதம் காத்த வளாகத்திற்குள் வந்ததால், நொந்து, வெந்து வெடிக்கின்றனர்.

இப்படிப்புகள் சார்ந்த பாடப் பொருள்கள், சமூகம், பொருளாதாரம், வரலாறுகள் பற்றிய கருத்துகள் பேசுவதால், ஆய்வதால், இதைப் படிக்கும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்கான கருத்துக் களங்களும், பேசும் வாய்ப்புகளும், விவாதிக்கும் உரிமைகளும் தானே அந்த வளாகத்துள் வருகின்றன. நிர்வாகம் அதை கல்விக்கு அப்பாற்பட்டவையாகக் கருத முடியாமல், கண்டிக்க முடியாமல் போனதால் காழ்ப்பின் உச்சத்தில் நின்றனர். அய்ந்தாண்டுக்கால ஒருங்கிணைந்த அப்படிப்புகளை அவ்வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தவும், அந்த ஆசிரியர்களை நீக்கவும் ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்ட இந்த ஆரிய பார்ப்பனர்கள் இன்றைக்கு கலைப் பாடங்களை அய்.அய்.டி. வளாகத்தில் வரக் கூடாது என்பது ஏன்?

இச்சூழலில்தான் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கி, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், பார்ப்பன ஆதிக்கப் பாதிப்புகள் போன்றவற்றை விவாதித்து மாணவர்களுக்கு விழிப்பூட்டினர். மோடி அரசின் மோசடிகள் தோலுரிக்கப்பட்டன, முகமூடிகள் கிழிக்கப்பட்டன. மோடி அரசைத் தாங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள் ஆத்திரங்கொண்டன. கண்ணெதிரே தங்கள் ஆதிக்கக் கோட்டைச் சரிவதைக் கண்டு கலங்கின. வரலாற்றை மறைத்து, ஆரிய பார்ப்பனர்களை இந்த நாட்டின் மக்களாகவும், முஸ்லீம்களை வந்தேறிகளாகவும் காட்ட முயன்றனர். அவர்கள் முயற்சி முறியடிக்கப்பட்டதாலும் கொதிப்பேறினர்.

அய்.அய்.டி. வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என்று 70% மேல் ஆரியப் பார்ப்பனர்கள்தான். அவர்களிலும் பலர் ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள்தான். எனவே, ஆர்.எஸ்.எஸ்.இன் வழக்கமான செயல்திட்டப்படி சூழ்ச்சி, மோசடி, வதந்தி பரப்பல், இரகசியத் திட்டம், வன்முறை என்ற பல வழிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.

அம்பேத்கர்_பெரியார் வாசக வட்டத்தினர் அவர்களுக்கு முதன்மை எதிரிகளாய் முன்னால் நிற்கின்றனர். நடிகர் பின்னால் நின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அம்பேத்கர், பெரியார் கொள்கை ஏந்தி ஆதிக்கம் அழிக்க, உரிமை காக்கப் புறப்பட்டதால், அவர்களின் வேகத்தை, செயலை, நடவடிக்கைகளை ஒடுக்க ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம் திட்டமிட்டு, அதனால், முதல் கட்டமாக மொட்டைக் கடுதாசி மூலம் அதை நிறைவேற்றியது.

ஆதாரப்பூர்வமான கடிதத்தை ஏற்று அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவே பல விதிமுறைகள் உள்ளன. அப்படியிருக்க இவர்களே ஒரு மொட்டைக் கடுதாசியைத் தயாரித்து, அதை மத்திய அரசு வரைக் கொண்டுசென்று, அம்பேத்கர் பெரியார் வாசக  வட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.

ஆரிய பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளும் சூழ்ச்சிக்காரர்களே தவிர அறிவாளிகள் அல்ல என்பதை அவ்வப்போது நிரூபித்து வந்ததைப் போலவே, இதிலும் நிரூபித்துள்ளனர். ஒடுக்க நினைத்த உணர்வு இப்போது உசுப்பிவிடப்பட்டு, ஓங்கி வளர்ந்ததோடு ஒவ்வொர் இடத்திலும் முளைத்து கிளைத்தெழத் தொடங்கிவிட்டது.

ஆம். இந்தியா எங்கும் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் பெயரால் அமைப்புகளை மாணவர்கள் அமைத்து வருகின்றனர். ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான கிளர்ச்சி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், அய்.அய்.டி. நிர்வாகத்திற்கு எதிர்ப்பு இந்தியா முழுக்கவுள்ள மாணவர் அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

இது தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களையும் தாண்டி மற்ற கல்வி நிறுவன மாணவர்கள் மத்தியிலும் இன உணர்வை, ஆரியம் ஆதிக்க எதிர்ப்பு வேகத்தை உருவாக்கியுள்ளது. மாணவர், வெடித்துக் கிளம்பினால் விளைவு எப்படியிருக்கும் என்பதை அவர்கள் பலமுறை பல நிகழ்வுகளில் காட்டியுள்ளனர். தற்போது எழுந்துள்ள இந்த ஆதிக்க அழிப்புப் போராட்டம் அடையவேண்டிய இலக்கை நிச்சயம் அடையும், ஆதிக்கக் கோட்டையை ஆரியக் கொழுப்பைக் குடையும்!

ஒட்டுமொத்த மாணவர் சமுதாயம் உணர்வுகொண்டு எழுந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் சமூகத் தொண்டு அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் ஆதரவாக குரலெழுப்பி, ஆரிய ஆதிக்கத்திற்குக் கண்டனம் தெரிவிக்கின்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன தலைவர்களும், இந்துத்துவா பேர்வழிகளும்  பி.ஜே.பி.யினரும் மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப, ஒடுக்க தவறான, மோசடியான கருத்துகளைக் கூறுவதோடு, எதிர்ப்பான முழக்கங்களை எழுப்பி, பெரியாரையும், அம்பேத்கரையும் பிரித்துக்காட்ட, பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். எனவே, இந்த நேரத்தில் மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் விழிப்பாகவும், தெளிவாகவும் இருந்து எதிரிகளை எதிர்கொண்டு, முறியடிக்க வேண்டும்.

ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்க, மோசடிச் செயல்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு நமது நியாயங்களை, உண்மைகளை பல வகையிலும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களிடையே பிளவு உண்டாக்க எதிரிகள் செய்யும் சதியை முறியடித்து, இன்னும் இறுக்கமாய், நெருக்கமாய் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும். வசிஷ்டர் வட்டம், வியாசர் வட்டம், தூர்வாசர் வட்டம் என்று பல அமைப்புகள் அங்கு இருக்கும்போது, சுதந்திரமாக, விதிமுறைகளுக்கு எதிராய் பல செயல்களைச் செய்துவரும்போது, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை மட்டும் தடைசெய்த அநீதியை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு சென்று பரப்ப வேண்டும். துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கங்களை எல்லாம் மதப் பிரச்சாரங்களை, மூடநம்பிக்கைகளை, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்கும் முயற்சிகளைத் தொடர்ந்து அங்கு செய்துவரும்போது, அதைக் கண்டிக்காத, ஆர்.எஸ்.எஸ். ஆட்களையெல்லாம் அழைத்துவந்து நிகழ்ச்சி நடத்துவதை தடுக்காத அய்.அய்.டி. நிர்வாகத்தின் பாரபட்சத்தை பரப்புரை செய்ய வேண்டும்.

அம்பேத்கர் பெரியார் அமைப்புதான் புதிதாக அரசியல்சார் கருத்துகளை அங்கு விதைப்பதாகவும், பிரச்சாரங்களைச் செய்வதாகவும் பொய்யான பிரச்சாரம் செய்யப்படுவதை முறியடிக்க, இந்துத்துவா அமைப்புகள் இதுவரைச் செய்த மதப்பிரச்சாரங்களை, அரசியல் பிரச்சாரங்களை தொகுத்து வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக 2006ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராய் அய்.அய்.டி. ஆரிய பார்ப்பன மாணவர்கள் செய்த போராட்டங்களையும், அதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அளித்த ஆதரவையும் எடுத்துக் கூற வேண்டும்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிர்வாகம், இன்றைக்கு உண்மைகளை எடுத்துக்கூறி விழிப்பூட்டிய அம்பேத்கர் பெரியார் அமைப்பினர் இடஒதுக்கீடு கேட்டு உரிமைக்குரல் எழுப்பினால் தடைவிதிக்கும் அயோக்கித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

இராமாயண வாசிப்பு வைத்துக் கொண்டு, ஆரியர்களை உயர்த்தியும், திராவிடர்களைத் தாழ்த்தியும் பிரச்சாரம் செய்ய அனுமதித்த நிர்வாகம், அம்பேத்கர், பெரியாரின் பெயரில் மனிதநேயக் கொள்கைகளைக் கூற தடைபோடும் அநீதியை வெளிப்படுத்த வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டமே நடத்தப்படாதது போலவும், அம்பேத்கர் பெரியார் அமைப்பினர்தான் போராட்டம் செய்து பெருமையை குலைப்பதாகவும் இந்துத்துவா அமைப்பினர் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், உண்மை என்ன?

2006இல் சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அரசின் 27% இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆரிய பார்ப்பன மாணவர்கள் போராட்டம் நடத்தியது மட்டுமல்ல, அதே 2006இல் உயர்கல்வி அமைப்பான எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ஒரு நாளா? இரண்டு நாளா? 17 நாள்கள் நடத்தினர். அப்போது அந்த நிர்வாகம் இப்போராட்டத்தைத் தடுத்ததா? மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததா? சுகாதாரத்துறை அமைச்சர் ஆணையிட்டும் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் நடவடிக்கை எடுக்கவில்லையே! மாறாக அவர்களுக்கு அந்த 17 நாட்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது.

 

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ளலாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப்பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் – 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு – மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரியராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் – அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

 

அன்றைக்கு ஆரவாரம் செய்த ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம், இன்றைக்கு, மாணவர் போராட்டத்தை எதிர்ப்பது அயோக்கியத்தனமல்லவா?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் செய்த குற்றம் என்ன?

அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை. பெரியார் யுனஸ்கோவால் தீர்க்கதரிசி, சீர்திருத்தச் செம்மல் என்று விருது பெற்றவர். இருவரும் உலக அளவில் உயரிய தலைவர்கள். இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை விழித்தெழச் செய்தவர்கள்; அவர்களின் இழிவு நீக்கி, உயர்த்தி நிறுத்தியவர்கள், ஆதிக்கவாதிகளின் அயோக்கியத்தனத்தை முறியடித்து ஆதிக்கம் அழித்தவர்கள். இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த ஏந்தல்கள்.

அவர்களின் பெயரால், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அமைப்பு உருவாக்கியது தவறா? அவர்கள் காட்டிய வழியில் ஆதிக்கச் செயல்பாடுகளைக் கண்டித்தது தப்பா? அவர்கள் தந்த இடஒதுக்கீடு அய்.அய்.டி.யிலும் வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கேட்டது குற்றமா? இந்துத்வாவாதிகளை வளரவிட்டு, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிராய்ச் செயல்படும் மோடி அரசை விமர்சித்தது தகாத செயலா?

ஆரிய பார்ப்பன மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடினால், மத்திய அரசைக் கண்டித்தால் அது சரி, தர்மம், நியாயம்!

ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீடு கேட்டு, ஆதிக்கப் பேர்வழி களுக்குத் துணைபோகும் மத்திய அரசை விமர்சித்தால் அது குற்றமா?

இங்கு நடப்பது மக்களாட்சியா? மனுதர்ம ஆட்சியா? மாணவர்கள் உணர்ச்சி மகத்தானது என்பது புரியாமல் சீண்டிப் பார்த்ததால், தாண்டி வந்து தாவி எழுந்தார்கள் என்றால், காவிக்கூட்டம் காணாமல் போய்விடும். எச்சரிக்கை!

தீர்வு என்ன?

உயர்கல்வி நிறுவனங்களில் ஆரிய பார்ப்பன ஆதிக்கம் ஆசிரியர் மத்தியிலும் உள்ளது; மாணவர்கள் மத்தியிலும் உள்ளது. ஒடுக்கப்பட்ட மாணவர்கள் என்றைக்கும் அடங்கியே இருக்க மாட்டார்கள்.

தங்கள் உரிமைக்கும், வாழ்வுக்கும், கல்விக்கும் குரல் எழுப்பியும், போராடவுமே செய்வர். அதை ஒடுக்கி, அடக்க நினைப்பது அறிவீனம்! மாறாக, மக்கள் விகிதாச்சாரப்படி உயர்கல்வி நிறுவனங்களிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். இடஒதுக்கீடு ஒன்றே எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.

அனைத்து கல்வி நிலைய மாணவர்களும் இதற்காகப் போராட வேண்டும். படிப்பது மட்டும் மாணவர் வேலை. இதையெல்லாம் செய்யலாமா? என்று ஏமாற்றுப் பேர்வழிகள் ஏய்க்கப் பார்ப்பர். படிப்பது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும்! இந்தப் போராட்டங்களும் அதற்காகத்தான் என்பதை அடிமுட்டாள்கள் அறிய வேண்டும்! அறியச் செய்ய வேண்டும்!

அய்.அய்.டி வளாகத்திற்குள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அய்ந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கலைப் பாடங்களை நீக்கவும், அதற்கான ஆசிரியர்களை அகற்றவும் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். முயற்சியை மாணவர்கள் ஒன்றுசேர்ந்து  முறியடிக்க வேண்டும். தொழில்நுட்பத்தோடு கலைசார்ந்த மானுடக் கல்வியும் கட்டாயம் வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் எழுந்துள்ள இந்த மாணவர் எழுச்சி இலக்கை எட்டட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!

மற்றவர்களால் முடியாதது மாணவர்களால் மட்டுமே முடியும்! மாணவர்களுக்கு வந்துள்ள ஆதிக்க எதிர்ப்புணர்வு, தன்மான உணர்வு, உரிமை வேட்கை வளரும், பரவும், இலக்கை எட்டும்!

– மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *