உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன? – தந்தை பெரியார்

அக்டோபர் 16-31

நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாக இருக்காது. ஆனாலும், உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன்.

 

இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது? சுப்பிரமணியசாமிக்குக் கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர் மீது ஊர்க்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை, வியாபாரம் முதலியவற்றை விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷம்தோறுமா கல்யாணம் செய்வது?

இந்தக் காவடி தூக்கிக் கொண்டு கண்டபடி குதிப்பதிலும், உளறுவதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதை அன்னிய மதக்காரனோ, அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தப்படி ஆடினால் நாம் என்ன சொல்லுவோம்? நமது அறிவுக்கும், நாகரிகத்திற்கும் இதுதானா அடையாளம்? எத்தனை வருஷக் காலமாக இந்தப்படி மூடக் கொள்கையில் ஈடுபட்டு வருகிறோம்? என்ன பலனைக் கண்டோம்? மனிதனுக்கு முற்போக்கே கிடையாதா? 2000, 3000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாறவில்லை.  இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருக பிராயக்காரன் என்று காட்டுவதுடன் நமது பணம் எவ்வளவு செலவாகின்றது? நமது நேரமும், ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது? பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும், பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாக அறிந்தவன், சகலமும் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகிறான். மனிதனுடைய முற்போக்கையும், அவனது கஷ்டத்தையும், கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும், இந்த எண்ணங்கள் தடைப்படுத்துகின்றன.

பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும், கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்துப் பாடுபட்டும் பட்டினியாயும் போதிய ஆகாரமும், வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும். இது போலவே பாடுபடாத சோம்பேறிகள் கோடீஸ்வரர்கள் ஆகவும், தலைமுறை தலைமுறையாய் பிரபுக்களாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள்தான் காரணம். இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும், சோம்பேறிக்கும் (பார்ப்பானுக்கும்) தான் அனுகூலம். தொழிலாளிக்கும், கூலிக்காரனுக்கும், பண்ணைய ஆளுக்கும் கெடுதியே ஆகும்.

ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்துக்கும் கடவுளும் தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லி விடுவாரேயாகில்,  எப்படி அவர்கள் தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும்? அவன்தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்?

என்று பார்த்து அவற்றைத் தடுக்க வேண்டும். இந்தக் காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது, ஏனென்றால், கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறான். ஆகையால், அவை தங்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக் கொள்ளுவார்கள். இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லா தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும் அஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளைச் சிருஷ்டித்து, அதைப் பிரசாரம் செய்யப் பாதிரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பணம் கொடுத்து, காப்பாற்றி வருகிறார்கள். இந்தப் புரட்டுகளை உலகில் வெகுபேர் அறிந்திருந்தாலும், ரஷிய தேசத்தார்தான் முதன்முதலில் இதை அழித்து நீர்த்துளியாக்கிப் பணக்காரத் தன்மையையும், பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப் போலவே பணக்காரருடையவும், பார்ப்பனர்(பாதிரி)களுடையவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால், அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும், மதப் புரட்டும் என்பதை உணர்ந்து, அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எல்லோரும் சமமாக வாழுகின்றார்கள். அங்கு சோம்பேறியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபட வேண்டியது. அதன் பயனை எல்லோரும் சமமாக அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடுபட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.

ஆனால், இன்று இங்கு கடவுள் செயலால் இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு  1,000 ஏக்கர் 10,000 ஏக்கர் பூமி கூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால், விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்ளுகிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஒரு படி போதாதா, இரண்டு படி போதாதா என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பது போல் அரைத் துணி கொடுக்கிறான். வீடு வேண்டுமானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சை கொடுப்பது போல கொடுக்கிறான். ஆனால், மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடி வீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, விஸ்கி, நாடகம், சினிமா,  தாலுகா, ஜில்லா, போர்டு மெம்பர், பிரசிடென்ட், முனிசிபல் சேர்மேன் ஆகியவற்றுக்குப் பதினாயிரக்கணக்காக செலவு செய்து, ராஜபோகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும், இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கின்றேன். கடவுள் புரட்டு ஒழிந்தாலொழிய இந்த மிராசுதாரர்கள் ஒழிய மாட்டார்கள்.  இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும், ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங்களும் ஒழியாது. ஆகையால் இவற்றையெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும், அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன்படி நடவுங்கள்.

– (குடிஅரசு, 19.2.1933)

var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *