இருட்டில் திருட்டு ராமன் – 2

ஜூலை 16-31 2013

ராமனின் பிறப்பும் ராம ஜென்ம பூமி(?) சிக்கலின் தொடக்கமும்

– சு.அறிவுக்கரசு

சொந்த ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் சென்று கிடைத்த வேலையைச் செய்தான். இவன் ஜாதி என்ன என்று யாருக்கும் தெரியாது அல்லவா!

வேலை செய்து சம்பாதித்ததில் மீதம் செய்து தன் வீட்டுக்குக் கொடுத்து வந்தான். அந்த நிலையில் ஒரு நாள் தன் தங்கைக்குத் திருமணம் ஏற்பாடு ஆவதாய் கேள்விப்பட்டான். ஆறுவயது படாஹிக்கும் கிழவன் ஒருவனுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டதாகச் செய்தி. சேதி தெரிந்ததும் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போய் திருமணத்தை நிறுத்திவிட முயற்சி செய்தான். ஆனால், மாப்பிள்ளையிடம் ஏற்கெனவே இருநூறு ரூபாய் வாங்கிவிட்ட அபிராம்தாசின் தந்தை திருமணத்தை நிறுத்த முடியாது எனக் கூறிவிட்டார்.

வாதம் செய்து பார்த்தான். அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் 6 வயது மணப்பெண் விளையாடிக் கொண்டிருந்தாள். கோபம் கொண்ட அபிராம்தாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.

மூன்றாம் நாள் திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குப் போன படாஹி சில மாதங்களுக்குள் திரும்பி வந்தாள் விதவையாக. மோவா அரும்பு எனும் நிலையில் இருந்த சிறுமி, கைம்பெண்ணாக, தந்தை வீட்டுக்கே வந்துவிட்டாள். மறுமணம் ஏதும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து 2005இல் இறந்தாள்.

சோற்றுக்கு லாட்டரி

அபிராம்தாஸ் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்னா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். தன் தந்தையுடன் உதவியாக இருந்தபோது தெரிந்து வைத்துக் கொண்ட சில சமக்கிருத வார்த்தைகளை முணுமுணுத்து கோயில் பூசாரியாக முயன்றான். உணவும் தங்கும் இடமும் கிடைத்தது. தட்சணை எதுவும் இவனுக்குக் கிடைக்கவில்லை. அர்ச்சகப் பார்ப்பனரே முழுவதையும் எடுத்துக் கொண்டார். அபிராம்தாஸ் ஒரு நாள் பட்னா நகரைவிட்டுப் புறப்பட்டு அயோத்யாவுக்கு வந்து சேர்ந்தான். இது நடந்தது 1934ஆம் ஆண்டு. அவனுக்கு வயது 30. சரயு நதியில் குளித்துவிட்டுக் கரை ஏறிய அவனை ஒரு சாது பார்த்தார். ஆறு அடிக்கு மேல் உயரம். வாட்டசாட்டமான முரட்டு உடம்பு. சாது அவனை அழைத்தார். தன் பெயர் சரயுதாஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று உண்ண உணவும் உறங்க இடமும் கொடுத்தார். அபிராம்தாஸ் பைராகியாக விருப்பம் தெரிவித்தான். உச்சிக்குடுமியைத் தவிர, மீதியை மொட்டை அடிக்கச் செய்தார். பண்டாரமாக்கிவிட்டார். அவனுடைய தந்தை சூட்டிய பெயராகிய அபிநந்தன் மிஸ்ரா என்பதை நீக்கினார். அபிராம்தாஸ் என்று மாற்றினார். சரயுதாஸ் யாதவ ஜாதி என்பதால் பார்ப்பன அபிராம்தாசுக்கு தீட்சை தரக்கூடாதாம். ஆகவே ஜமுனாதாஸ் எனும் பார்ப்பனரைக் கொண்டு தீட்சை தந்தார்.

என்றாலும் குடும்பத்தையோ, பந்தபாசங்களையோ துறக்க விருப்பம் இல்லாது வாழ்ந்தான். தன் தம்பிகள், ஒன்றுவிட்ட தம்பிகள் முதலியோரைத் தன்னுடன் வைத்துக் கொண்டார். பார்ப்பனர்கள் விருப்பம்போல் விதிமுறைகள் மாறிக் கொள்ளுமோ?

அனுமன் கார்ஹி கோயிலுக்குச் சொந்தமான நிலபுலங்களைக் கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டினான். ரியல் எஸ்டேட் தொழில் அந்தக் காலத்திலும் அதிக வருமானம் தரக்கூடியதாக இருந்துள்ளது போலும்! தனக்கென வருமானம் சேர்ப்பதைக் குறியாகக் கொண்டான். முசுலிம்கள் மீது வெறுப்பு விசத்தைக் கக்கிக் கருத்துகளைக் கூறத் தொடங்கினான். அகில இந்திய இந்துமகா சபாவின் உறுப்பினர் ஆனான். இந்துமத வெறிபிடித்த ஆட்களுடன் சேர்ந்து பழகத் தொடங்கினான்.

பாபர் மசூதியில் ராமன் பொம்மையை வைத்தான். இதன் பின்னணியில் பதுங்கியிருந்த பெரும் சதிச் செயல்பற்றி அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வழியில்லை. அவனோ, எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, முரடன். இப்படிப்பட்டவர்கள்தான் இந்துமகா சபாவுக்குத் தேவை. இவர்களைக் கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டு தலைவர்கள் ஆகிவிடுவார்கள். ராமன் பொம்மையை வைத்த இரண்டு நாள்களுக்குள் மகந்த் திக் விஜயநாத் அய்க்கிய மாகாண இந்துமகா சபா அமைப்பின் தலைவராகிவிட்டார். காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்த ஆள்.

காசேதான் கடவுள்

பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை ஏன் வைக்கவேண்டும்? பாபர் மசூதிக் கட்டடத்தைத் தங்கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது முதல் நோக்கம். அதன் வாயிலாக நிர்வானி அகாராவின் கட்டுப்பாட்டுக்குள் அயோத்தியா கொண்டுவரப்பட வேண்டும். நிர்மோகி அகாராவின் கட்டுப்பாட்டுக்குள் அனுமன் கார்கி கோயிலும் அதன் வருமானம் முழுமையும் உள்ளது. அத்துடன் ராமசபுதாரா எனும் இடம் இந்த அகாராவிடம் உள்ளது. ராமசபுதாரா என்பது அன்றுவரை ராமனின் பிறந்த இடம், ராமஜென்மபூமி என்று கூறப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. இங்கு கிடைக்கும் வருமானம் முழுவதுமே நிர்மோகி அகாராவையே அடைந்துவந்தது.

ராமசபுதாராவுக்கு 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமன் பொம்மையை வைத்துவிட்டால் அதுவே ராமஜன்ம பூமியாகிவிடும். ராமசபுதாராவின் முக்கியத்துவம் குறைக்கப்படும், வருமானம் எல்லாம் நிர்வானி அகாராவுக்கு வந்துசேரும். இத்தனைக்கும் காரணமான அபிராம்தாசின் செல்வாக்கு உயரும். நிர்மோகி அகாராவின் செல்வாக்கை இழக்க வைக்கும். ஜன்மபூமி உத்தாரக் என்ற நிலையில் அபிராம்தாஸ் அயோத்தியாவின் தட்டிக்கேட்க ஆளில்லாத் தலைவராகி விடுவான். ஏனென்றால் இவன்தான் ஜென்மபூமியை விடுவித்தவன் (உதாரக்) ஆகிவிடுவான். இதுதான் திட்டம்.

ராமன் யோக்யதை

ராமன் கடவுள் அவதாரம் என்கிறார்கள். விஷ்ணு எனும் கடவுளின் அவதாரமாம். அவதாரம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு மனிதனாகப் பிறந்து, நாய்படாதபாடு என்று சொல்வார்களே, அப்பேர்ப்பட்ட துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? நான்கு காரணங்கள். நான்கும் சாபங்கள். கடவுளுக்கே சாபமா? கடவுளுக்கே சாபம் கொடுக்கும் சக்தி படைத்தவர்களாக முனிவர்கள் இருந்திருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பழங்காலத்தில் இருந்த கடவுள்களும் முனிவர்களும் தற்காலத்தில் இல்லாமல் போனது எப்படி? இதை யாரும் ஆராயவில்லை, இதுவரை!

1. பிருகு எனும் முனிவரின் மனைவியை விஷ்ணு கொலை செய்துவிட்டதாம். மனைவியை இழந்து வாடிய முனிவன், விஷ்ணுவும் மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து கஷ்டப்படும்படிச் சாபம் கொடுத்து விட்டானாம். வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் 51ஆம் சருக்கப் பாடல் இதனைக் கூறுகிறது. இதனை உறுதிப்படுத்துகிற வகையில் மகா கந்த புராணம், உபதேச காண்டம் 64ஆம் அத்தியாயத்திலும் பாடல் ஒன்று உள்ளது.

2. ஜலந்திரனின் மனைவி பிருந்தாவைப் புணரவேண்டும் என்பது விஷ்ணுவின் ஆசையாம். திடீரென இறந்துவிட்ட ஜலந்திரனின் உடலுக்குள் புகுந்துகொண்ட விஷ்ணு, பிருந்தாவுடன் உடல் உறவு கொண்டிருந்தான். சில நாள்களில் விஷ்ணுவின் காமச்சேட்டைகளைத் தெரிந்துகொண்ட பிருந்தா, விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்தாள். பிருந்தா தற்கொலை செய்து கொண்டாள். காமவெறி அடங்காத விஷ்ணு, சாம்பலில் படுத்துப் புணர்ந்து கொண்டதன் விளைவாக துளசிச் செடி முளைத்துவிட்டதாம். அதன் இலைகளை மாலையாக அணிந்து மயக்கம் தீர்ந்தது எனப் போகிறது சாபம் இட்ட கதை. மகா கந்த புராணம், தக்க காண்டம், 23ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.

3. பகலில் தன் மனைவியை விஷ்ணு புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட சிவகணத் தலைவர் அற்புதாக்சன் என்பவன் யாரடா, பகலில் இக்காரியத்தைச் செய்வது? என்று கேட்டான். தன் செயலை நிறுத்தாமல் விஷ்ணு, கேட்பவன் யாரடா? என்று கேட்டதாம். சிவனின் கணங்களின் தலைவனான நந்தியிடம் இச்செய்தியை அற்புதாக்சன் தெரிவித்தானாம். உடனே நந்தி சாபம் இட்டதாம். இந்தச் செய்தி சிவரகசியம், மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம், 43ஆம் சருக்கத்தில் உள்ளது.

4. இந்தப் பகல் நேரப் புணர்ச்சி சிவரகசியம், 3ஆம் அம்சம், இரண்டாம் காண்டம், 4ஆம் சருக்கத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. விஷ்ணு புணர்ந்து கொண்டிருந்தபோது, எக்குத் தப்பாகப் பிருகு முனிவன் விஷ்ணுவைக் காணவந்தான். கடவுளின் கலவிக்குக் காவல் பணியில் இருந்த விஷ்ணுவின் வாகனம் கருடன் முனிவனைத் தடுத்ததாம். முனிவன் கருடனைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு உள்ளே நுழைந்தானாம். கவனித்த கடவுள், முனிவனைக் கையைக் காட்டி நிற்கும்படி சைகை காட்டியதாம். விளங்காத முனிவன் அந்தி வேளைதன்னில் ஏந்திழையைப் புணர்வரோ? என்று கோபமாகக் கேட்டுச் சாபம் தந்துவிட்டானாம்.

பிறப்பு அசிங்கம்

கடவுளின் காமவிகாரத்தால், செய்யப்பட்ட வினைகளின் எதிர்வினைகளாகச் சாபங்கள் கொடுக்கப்பட்டதாக நான்கு கதைகளும் காட்டிக் கொண்டிருக்கின்றன. சாபங்களின் விளைவாகக் கடவுள் மனிதனாகப் பிறந்திருக்கிறது. இது கடவுளின் யோக்யதைக்கு இழுக்கு அல்லவா? இப்படிப்பட்ட இழி பிறப்பான ராமன் பிறந்த இடத்திற்கு என்ன மகோன்னதம்? என்ன மரியாதை?
கேடுகெட்ட இப்பிறப்பாவது, முறையாக நடந்துள்ளதா? அசுவமேதயாகம் செய்திருக்கிறான் ராமனின் தந்தை(?)யான தசரதன். பூபஸ்தம்பம் எனப்படும் யாகத் தூண்கள் 21 நடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் பசுக்கள், பாம்புகள், பறவைகள் கட்டப்பட்டன. 300 பசுக்களும் ஒரு குதிரையும் கட்டப்பட்டிருந்தன.

தசரதனின் மூன்று பட்டத்து ராணிகளான கவுசல்யா, கைகேயி, சுமத்திரை ஆகியோரை அத்வர்யு, ஹோதா முதலிய முனிவர்களுக்கு தட்சணையாகத் தசரதன் கொடுத்துவிட்டான். கணவனால் தட்சணையாகத் தரப்பட்ட மூன்று ராணிகளோடும் முனிவர்கள் சல்லாபித்துத் திரிந்தனர். அத்தனையும் முடிந்த பிறகு பணத்தைப் பெற்றுக் கொண்டு, ராணிகளை மீண்டும் தசரதனிடம் ஒப்படைத்து விட்டனர். குத்தகை முடிந்து விட்டதோ?

யாகக் குதிரையை கவுசல்யா வெட்டிக் கொன்று, செத்த குதிரையைக் கட்டிப் பிடித்தபடி ஓர் இரவு முழுவதும் படுத்துக் கிடந்தாள். அத்வர்யு, ஹோதா முதலிய முனிவர்களின் புணர்ச்சியால் ராணிகள் மூவரும் அன்றே கர்ப்பமாகி விட்டனர் என்று வால்மீகி ராமாயணம் (14ஆம் சருக்கம்) கூறுகிறது. புத்திரகாமேட்டி யாகம் என்பதையும் தசரதன் செய்தான் என்று வால்மீகி அடுத்த சருக்கத்தில் எழுதியுள்ளான். கம்பன் அசுவமேத யாகம் பற்றிப் பாடாமல் புத்திர காமேட்டி யாகம் பற்றி மட்டுமே பாடியுள்ளான்.

பாயசக் கர்ப்பமா?

இந்த யாகத்தில் தீயினின்றும் ஒரு பூதம் தோன்றியதாம். பாயசம் தந்ததாம். அந்தப் பாயசத்தை மூன்று மனைவிகளுக்கும் தந்து குடிக்கச் செய்தானாம் தசரதன். செம்பில் பாதி அளவு கவுசல்யா, மீதியில் பாதி அளவு கைகேயி, மீதியை சுமத்திரை ஆகியோர் குடிக்குமாறு தந்தானாம். மூவரும் கர்ப்பம் தரித்தனராம்.

இரண்டு விதமாக ராமனின் இழிபிறப்பு நடந்திருக்கிறது. இரண்டாவது முறையில் குறிக்கப்படும் பாயசம் குடித்து கருத்தரித்த முறை நம்பக் கூடியதா? பாயசத்திற்கு மனிதக் கருவை உற்பத்தி செய்யும் தன்மை உண்டா? வாயில் ஊற்றிக் குடிக்கும் பாயசம் உணவுக்குழாய் வழியே இரைப்பைக்குப் போய்ச்சேரும். செரித்தபின் சிறுகுடல், பெருங்குடல் வழியே சென்று  மலக்குடல் வழியே வெளியேறும் என்பதுதானே உடல் அமைப்பு?

பாயசம் எப்படிக் கருப்பைக்குப் போகும்? குழந்தை உருவாகும்? ராமன் சகோதரர்கள் பிறப்பே, மோசடி முறையாக அல்லவா இருக்கிறது?

ராமன் மட்டும் எப்படி அவதாரம்?

ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகிய நால்வருமே சாபத்தால் விஷ்ணுவுக்குப் பிறந்த பிள்ளைகள். அப்படியானால் நால்வருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே? ராமனை மட்டும் ஏன் அவதாரம் என்கிறார்கள்? மற்ற மூன்று பேரும் ஏன் முக்கியமற்ற சப்பாணிகள் என்று ஆக்கி விட்டனர்?

இந்த ராமனை விளம்பரப்படுத்திக் கடவுளாக்கியவர்களே, விஜய நகர அரச வம்சத்தினர்தாம். பாமினி சுல்தான்களால் தாக்கப்பட்டு அதனால் உருவானதுதான் இந்தப் பேரரசு. இசுலாமிய எதிர்ப்பு உணர்வால் உருவாக்கப்பட்ட இந்துமத அரசமைப்பு விஜய நகர அரசு. இவர்களால்தான் தென்இந்தியாவில் ராம அவதாரம் பெரிதுபடுத்தப்பட்டது. ஏனெனில் அரசுக்கு நெருக்கமானது ராம அவதாரம். அரசப் பிறப்பு, அரச வளர்ப்பு, அரசக் கல்வி, கையில் வில் அம்பு ஆயுதம் எனும் கோதண்டராமன் அரசர்க்கு மிகவும் பிடித்ததாக ஆகிவிட்டது.

வாள், வேல், கதாயுதம் போன்ற தொடக்ககால ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் இருந்துதான் போராட வேண்டும். ஆனால் வில், அம்பு கொண்டு தூரத்தில் இருந்தே போராட முடியும். அத்தகைய ஆயுதம் ராமன் கையில் இருந்ததால் அரசருக்குப் பிடித்துப் போயிற்று. மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டு அம்பெய்து வாலியை ராமன் கொன்றான் எனும்போது நேருக்கு நேர் நின்று போராடக்கூடத் தேவையில்லாத ஆயுதத்தை ராமன் கையில் கொடுத்ததால், எப்படியும் அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் எனும், முறையற்ற அதிகார வெறிபிடித்த மன்னர்க்கு மிகவும் பிடித்தவனாக ராமன் தெரிந்தான்.

அதிகார வெறியின் அடையாளம் ராமன். ஆகவே அந்தப் பொம்மையை இசுலாமியரின் வழிபாட்டுத் தலத்தில் வைத்தால், இடம் இசுலாமியரிடமிருந்து இந்துக்கள் கைக்கு மாறுவது இலகுவாகிவிடும் என்பது இந்து மகா சபையினரின் கணக்கு.

இந்து மகா சபா

பொம்மையை வைத்த மறுநாள் 24.12.1949இல் கொல்கத்தாவில் நடந்த இந்துமகாசபா மாநாட்டில் பேசிய விநாயக தாமோதர் சாவர்க்கார், அகண்ட பாரதம் தன் கண்களுக்குத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.

காந்தியாரைக் கொன்றுவிட்டு இரண்டு ஆண்டுக்காலம் பதுங்கிக் கிடந்த ஓநாய்கள் ஓங்காரக் குரல் எழுப்பத் திராணியைத் தந்த செயல் _ பாபர் மசூதியில் ராமன் குழந்தை பொம்மையை வைத்ததுதான்! அந்தளவு முக்கியம் பெற்ற சதிச் செயலுக்குக் காரணமானவர்கள் மூன்று பேர்.
மகாராஜா படேஸ்வரி பிரசாத் சிங் எனும் பல்ராம்பூர் சிற்றரசர், மகந்து திக்விஜயநாத், கே.கே.நாயர் எனும் கோண்டா மாவட்ட கலெக்டர் எனும் மூவர்தான் சதிக்கும்பல்.

சதிக்கும்பல்

பல்ராம்பூர் சிற்றரசர் படேஸ்வரி பிரசாத் சிங் என்பவர் 1-.1.1914 இல் பிறந்தவர். பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் ஹான்சன் என்பவரால் அரச குடும்பத்தவர்க்குரிய முறையில் வளர்க்கப்பட்டவர். அஜ்மீரில் உள்ள மேயோ பிரின்ஸ் கல்லூரியில் படித்தவர். குதிரைச் சவாரி, டென்னிஸ் ஆட்டம் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர்.

1946 கோண்டா மாவட்ட கலெக்டராக வந்த மலையாளியான கே.கே.கே. நாயர் என்பவருடன் டென்னிஸ் ஆட்டக்காரர் என்ற முறையில் பழக்கமானவர் சிற்றரசர். கோண்டாவிலிருந்து 1947 ஜூலை மாதத்தில் நாயர் மாற்றப்பட்டாலும்கூட இருவரின் நட்பு தொடர்ந்தது.

மூவரில் மூத்தவரான மகந்து திக்விஜய்நாத், சிற்றரசர் ஏற்பாடு செய்த யாகம் ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். இந்து மதத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக தர்ம சங்கம் என்பதை ஆதிசங்கரனின் தத்துவ வழியில் 1940இல் தொடங்கி நடத்திவந்த கற்பாத்ரி எனும் சாமியாரும் யாகத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார்.

யாகம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் செய்தவற்றைப் பற்றி, அவர்கள் நடத்திய இந்து சபா வர்த்தர் எனும் ஏட்டில் இந்துமகா சபையினரே பின்வருமாறு எழுதியுள்ளனர். யாகத்தின் கடைசி நாளன்று சாவர்க்காரின் கட்டளைப்படி அந்நியரின் பிடியில் இருக்கும் இந்துமதச் சிறப்பிடங்களைக் கைப்பற்றுவது பற்றித் திட்டம் போட்டனர். பாபரி மசூதியைக் கைப்பற்றுவதுபற்றி கற்பாத்ரி சாமியாருடனும் கே.கே.நாயருடனும் விவாதித்தனர். தீர்க்கமாக யோசித்து முடிவான திட்டத்துடன் சந்திப்பதாகக் கூறி, நாயர் கோண்டாவுக்குத் திரும்பினார்.

மறுநாள் நாயர் அவர்களைச் சந்தித்தார். கற்பாத்ரியும் திக்விஜய் நடத்தும் தங்களது திட்டங்களை விவரித்தனர். அயோத்தியில் பாபர் மசூதி, காசியில் விசுவநாத் கோயில், மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடம் ஆகிய மூன்றையும் கைப்பற்ற வேண்டும் என்பதைக் கூறினர். இந்தப் பணிகளை முடிக்கத் தாம் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக நாயர் அவர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *