இந்திய தத்துவங்களில் கடவுள் மறுப்பு – 7

மார்ச் 01-15

கருத்து முதல் வாதம் – பொருள் முதல் வாதம்

இந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.

எண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.

பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.

ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.

முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.

ஏழு தீவுகளாம். சுற்றிலும் ஏழு கடல்களாம். ஏழு மலைகளாம். பூமிக்கு அடியில் அதல, விதல, நிதல, சுதல, தலாதல, ரசாதல, பாதாள எனப்படும் ஏழு உலகங்களாம். அங்கே வைத்தியர், தானவர், நாகர் ஆகியோர் வசிக்கின்றனராம். இவர்களைப் படைத்தது யார் எனும் விவரம் தரப்படவில்லை.

கருத்துமுதல்வாதிகள் உலகம் முழுக்க இருக்கின்றனர். கருத்துமுதல்வாதம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்றால்… இல்லை! மேல் உலகம் யுருத்_வா என்றும் அதில்தான் தேவர்கள் வசிக்கின்றனர் என்றும் கீழ்உலகில் அதோ _ எனும் நரகம் இருக்கின்றது என்றும் பாபம் செய்தவர்கள் தள்ளப்படும் நரகம் இதுதான் என்றும் சமணம் (ஜைன) கூறுகிறது. கடவுளை மறுத்தாலும் ஆன்மா, பாவம், புண்ணியம், கர்மவினைப்பயன் என்ற கசுமாலங்களை எல்லாம் நம்பும் சமணம், புண்ணியம் செய்பவர்களின் ஆன்மா! தேவர் வசிக்கும் யுருத்வானவத்தாண்டி அதற்கும் மேலே சென்று அசைவற்று அப்படியே நிரந்தரமாக நிற்குமாம். (ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் எடைஇன்றி, அசைவு இன்றி இருக்கும் நிலையைச் சொல்கிறார்களோ?)

ஆனால், கடவுளை மறுக்கும் பொருள்முதல்வாதம் உலகம் முழுக்க ஒரேமாதிரியாகத்தான் கருதப்படுகிறது, கூறப்படுகிறது, எழுதப்படுகிறது, கடைப்பிடிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி உருவானது? சூரியன் எனும் நெருப்புக் கோள நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு நட்சத்திரம் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, கடும் வேகத்தின் காரணமாக உடைந்து, வெடித்ததன் விளைவாக அதன் துண்டுகள் வெகுதூரத்திற்குச் சிதறி எஞ்சிய வாயு மட்டுமே சூரியனைச் சுற்றிவரும் நிலை உண்டானது. அதிலிருந்துதான் சூரியச் சுற்றுக் கிரகங்கள் ஏற்பட்டன எனும் உத்தேசக் கருத்து (HYPOTHESIS) உள்ளது.

பலகோடி ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு என்பதால் நேரிடை சாட்சியோ, சான்றோ, பதிவோ, ஆதாரங்களோ? எதுவும் இல்லாத நிலையில் அறிவியல் இந்த முடிவுக்கு வருகிறது. கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஃபிரெட் ஹாய்ல் (FRED HOYLE) இக்கருத்தை வெளியிட்டவர்.

சூரியனைச் சுற்றிய நட்சத்திரம் வெடித்த நிகழ்வுதான் பெருவெடி (BING BANG) என்று அறிவியல் கூறுகிறது. அண்மையில் இந்தப் பெருவெடியினை அறிவியலாளர்கள் சுவிட்ஜர்லாந்து நாட்டில் பூமிக்கு அடியில் செயற்கையகச் செய்ததும் அதனால் வாயு வெளிப்பட்டதும் அறிவிக்கப்பட்டதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். பாழாய்ப்போன கடவுள் துகள் என்று அறிவியலாளர் கூறியதையும் நினைவு கூர்க!

நாம் இருக்கும் இவ்வுலகின் குறுக்களவு 7918 மைல்கள். நிலப்பரப்பு 6 கோடி 75 இலட்சத்து 10 ஆயிரம் சதுரமைல் உள்ளது. நீர்ப்பரப்போ இதைப்போல இருமடங்காக அதாவது 13 கோடி 94 லட்சத்து 40 ஆயிரம் சதுர மைல்கள் உள்ளது. சூரியச் சுற்றுக் கோள்கள் எனும் சூரியக் குடும்பம் உலகைவிடப் பன்மடங்கு பெரிய வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் போன்ற கோள்களைக் கொண்டது. உலகைவிடச் சிறிய புதன், வெள்ளி, செவ்வாய், புளுட்டோ போன்ற கிரகங்களும் கொண்டது. ரா-கு, கேது எனும் கிரகங்கள் ஜோதிடப் புளுகில் மட்டும் இடம் பெற்றவை. இவற்றிற்கு அறிவியலில் இடம் இல்லை.

சூரியனின் குறுக்களவு 8 லட்சத்து 64 ஆயிரத்து 392 மைல்கள். பூமியைவிடச் சூரியன் 109 மடங்குக்குமேல் பெரியது. சூரியனின் வெப்பம் இல்லாமல் போனால் உயிர்கள் வாழமுடியாது. அதனை அறிந்திருந்த தமிழன் ஞாயிறு போற்றுதும் என்றான். (பார்க்க: சிலப்பதிகாரம்) போற்றினானே தவிர, நமஸ்கரிக்கவில்லை, வணங்கவில்லை. வணங்குவது வேதாந்த மரபு, கருத்துமுதல்வாதிகளின் மடமைக் கொள்கை. சூரியனின் வெப்பம் முழுக்க காலியாகிவிடும் நாளில் ஞாயிறுக் குடும்பமே அழியும் என்கின்றார் அறிவியலாளர் சர். ராபர்ட் பால்.

பிரபஞ்சத்தில், ஞாயிறு குடும்பம் தவிர, மீன்வழிக் குடும்பம் என்ற ஒன்றும் இருக்கிறது. SIDEREAL SYSTEM எனும் இக்குடும்பத்தில் பால்வெளி (MILKY WAY) யில் உள்ள நெபுலே, நட்சத்திரக் கொத்துகள் போன்றவை உள்ளன. மீன்வழிக் குடும்பம் என்பது நம் ஞாயிறுக் குடும்பத்தைப் போலப் பல, பல, பலப்பல மடங்கு பெரியது. இதன் தூரத்தை அளக்கப் பயன்படுவது ஒளிஆண்டு எனும் கணக்கு. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் மைல்கள். சூரிய ஒளி பூமிக்கு வருவதற்கு 8 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் மீன்வழிக் குடும்பத்தில் மிகமிகக் கிட்டத்தில் இருக்கும் சீரியஸ் எனும் நட்சத்திரத்திற்குப் போக எட்டு ஒளி ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டுள்ளனர். அப்படியானால் எத்தனைக் கோடிக்கணக்கான கோடி மைல்கள் தூரம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்களைக் கொண்டது ஒரு வீர மண்டலம் (GALAXY) என்றும் அப்படிப்பட்ட வீர மண்டலங்கள் 10 ஆயிரம் கோடி கொண்டதுதான் பிரபஞ்சம் (UNIVERSE) என்றும் அறிவியலாளர் சர். ஆர்தர் எடிங்டன் கூறுகிறார்.

இங்கே மிகச் சாதாரணமாகக் கடற்கரையில் சில பெண்களைக்கூட்டி நிற்க வைத்து, ஒருத்தியைப் பிரபஞ்ச அழகி என்கிறோம்! சரியா?

பொருள்முதல்வாத அறிவியலாளர் இவ்வளவு செய்திகளை ஆய்ந்து அறிவித்துள்ள நிலையில் கருத்துமுதல்வாதிகள் கொஞ்சம்கூட மூளையைக் கசக்கிக் கொள்ளாமல், எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா என்று வாயைப் பிளந்துவிட்டுப் போய்விட்டனர்.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான உலகம் சுமார் 300 கோடி ஆண்டுகளாக வெப்பமானதாக, எரியும் கோளமாகவே இருந்துள்ளது. அடுத்த 80 கோடி ஆண்டுக்காலத்தில் படிப்படியாக வெப்பம் தணிந்த பலியோ சோயிக் யுகமாக இருந்துள்ளது. அடுத்த 50 கோடி ஆண்டுக்காலத்தில்தான் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் உருவாகி இரண்டும் சேர்ந்து நீர் ஆகியது.

உலகம் தோன்றி சுமார் 430 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நீர் உருவாகியுள்ளது. ஆனால் கருத்துமுதல்வாதிகளான வேதாந்திகள் தொடக்கத்தில் நீர் இருந்தது. அதில் நீர்த்தூங்கி நாராயணன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தொப்புளில் இருந்து தாமரைப் பூ மலர்ந்தது. அம்மலரில் பிரம்மா. அவன் மூஞ்சியில் பிராமணன், புஜத்தில் சத்திரியன், தொடையில் வைசியன், பாதத்தில் சூத்திரன் என நான்கு வர்ணத்தினர் பிறப்பிக்கப்பட்டனர் என்று புளுகித் தள்ளிப் புரோகிதம் பார்த்துப் பிழைக்கின்றனர்.

வட அய்ரோப்பாவிலுள்ள கவிடோனியன் (CALEDONIAN RANGES) மலைத்தொடர் தோன்றி 50 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்பது அறிவியல். 300 கோடி ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த பூமிப் பந்தின் உள்ளிருந்து வெடித்து மேலே வந்து சிதறிய துண்டுகள் விழுந்த இடங்களில் மலைகளாகிவிட்டன. யூரல் (URALS), டியன்சான் (TIEN SHAN) மலைத்தொடர்களின் வயது 20இலிருந்து 30 கோடி ஆண்டுகளாக இருக்கலாம். பிரசித்தி பெற்ற ஆல்ப்ஸ் (ALPS) மலை 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் இமயமலை அதற்குப் பின்பும் தோன்றியிருக்கலாம். வயதில் இளையது இமயமலைதான்!

கெய்னோசொயிக் (COINOSOICERS) யுகம் எனப்படும காலத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகள் உறைபனிதான் உலகை மூடிக் கிடந்தது. சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய மனிதன் உருவானான். எகிப்திய, பாபிலோனிய நாகரிகங்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகிறது.

நீர் தோன்றிய பிறகு, அமீனோ அமிலம் (Amino Acid)  உருவாகி அதன் மீது சூரியக் கதிர் ஒளி படர்ந்து காலப்போக்கில் உயிர்த் துளிகள் ஏற்பட்டு பெட்டைடு (PEPTIDES) புரோட்டின் (PROTIENS) என்பவையெல்லாம் ஏற்பட்டன. புரோட்டின் இல்லாமல் உயிர்வாழ முடியாது! என்பதை அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அமைப்பு அற்ற புரோட்டின் உயிருள்ள பிராணிகள் செய்யும் உணவு உண்பது, செரிப்பது, கழிவை அகற்றுவது அசைவது, சுருங்குவது, புணர் உற்பத்தி செய்வது போன்ற அனைத்தையும் செய்கிறது என்றும் அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

ஒரு செல் உயிரி பெருகிப் பெருகி, குரோமோசோம் (CHROMOSOMES) என்சைம் (ENZYMES) என உற்பத்தி செய்து பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதன்முதல் கடல் நீரில்தான் உயிர்கள் தோன்றின. உலகின் தட்பவெப்ப நிலைகளில் நிகழ்ந்த மாறுதல்களின் விளைவாக புரோட்டோ பிளாசம் (PROTOPLASM) ஏற்பட்டது. அதுபோலவே உயிருள்ளவை அகநிலைப் பொருள்களை உட்கொண்டு வளரும் (METABOLISM) மெடபாலிசம் உருவானது. செடி, கொடிகள், மரங்கள் வளரும் முறை மெடபாலிசம் எனப்படுகிறது.

மெடபாலிச முறையில்தான் கல்லினுள் தேரை வளர்கிறது. அறிவில்லாத வேதாந்திகள் தேரைக்கும் பரமசிவன் படிஅளக்கிறான் எனக் கூறித் தம் மடமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

நீரில் உருவான உயிர்கள் காலப்போக்கில் தரைக்கு வந்து வாழ்ந்தன. மீனுக்கு அடுத்த கட்டமாக ஈதல் மீன் (LUNG FISH) என்பதை அறிவியலாளர் குறிப்பிடுகின்றனர். தவளை, முதலை போன்ற நீரிலும் நிலத்திலும் ஒருசேர வாழக்கூடிய AMPHIBIAN உயிரிகளுக்கு மூச்சுவிடும் உறுப்புகளும் நுரையீரல்களும் உண்டு. குட்டி போட்டுப் பாலூட்டி வளர்க்கும் (MAMMALS) உயிரிகளுக்கும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் உயிரிகளுக்கும் இடையே பிளாடிபஸ் (PLATIPUS) என்ற உயிரியும் இருக்கிறது. பால்சுரக்கும், பால் கொடுக்கும் உறுப்புகள் இல்லாததால் இவை, தம் மயிர்க்கால்களின் வழியே பாலை வெளித்தருகிறது. வியர்வையைப் போல.     இப்படிப்பட்ட மாறுபாடுகள், வேறுபாடுகள் தொடர்பான அறிவு கொஞ்சமும் இல்லாத வேதாந்திகள், சிந்தனாசக்தி சிறிதும் இல்லாமல், இவற்றிற்கான காரணி என்ன? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கடவுள் எனக் கூறிவிட்டனர்.

இன்றைய அறிவியல் அறிவு அன்றில்லை. எனவே அறிவியல் பூர்வ சிந்தனையை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்திருக்கலாமே! வேதமறுப்புத் தத்துவாதிகள் சிந்தித்தார்களே! தம் சிந்தனையின் பிழிவைத் தத்துவமாகத் தந்தார்களே! வேதமோதிகள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுவது இயற்கை தானே! நாங்கள் சொன்னதே சரி, இதை மாற்ற யாரும் முயலக்கூடாது, நினைக்கவே கூடாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர் சனாதனிகள். சனாதனம் என்றால் மாறாதது எனப் பொருள். மாறுவது ஒன்றுதான் மாறாதது என்பது கடவுள் மறுப்புவாதிகளின் கூற்று. அவர்களது சிந்தனைக் கதிர்களை நம் கண்களில் படாதவாறு எரித்து அழித்துவிட்டனர். என்றாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் பரவிச் செல்வாக்கு பெற்றுவிட்ட அந்தச் சிந்தனைச் சுடர் ஒளிகள் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்கிற முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், தம் நூல்களில் அந்தச் சிந்தனைகளைக் குறிப்பிட்டு அவற்றிற்கு எதிரான தம் கருத்துகளைப் பதிந்தனர். அந்த வகையில் அறிவார்ந்த கடவுள் மறுப்புத் தத்துவ ஒளிச்சிதறல்கள் நமக்கு இன்றளவும் கிடைக்கின்றன.

சந்திரகீர்த்தி என்பார் எழுதிய பிரஞ்ன சாத்திரத்தில் கடவுள் மறுப்பைக் கூறும் உலகாயத சாஸ்திரம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஆரிய தேவர் எழுதிய சதசாஸ்திரம் எனும் நூலில் பிரகஸ்பதி சூத்திரங்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. இந்தப் பிரகஸ்பதி என்பவர் எழுதிய நூல் அவர் பெயராலேயே பிரகஸ்பதியம் என்றே அழைக்கப்படுகிறது. உலகாயதக் கருத்துகள் அடங்கிய நூல் பிரகஸ்பதியம்.

அதுபோலவே, சார்வாக மேத கிரந்த கர்த்தர் எனும் நூல் புரந்தரர் என்பார் எழுதியதாக புப்பதத்தர் என்பாரின் நூலில் உள்ள குறிப்பு தெரிவிக்கிறது.

திவ்யவதனம் என்பது பவுத்தக் கொள்கை பற்றிய நூல். இந்நூலில் உலகாயதம் என்பது தனியானதொரு கல்விக் கொள்கை (SCHOOL OF THOUGHT) என்றும் அதற்கெனத் தனியான உரையும் விளக்கமும் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வால்மீகியின் ராமாயணத்திலேயே உலகாயதக் கருத்துகள் விளக்கப்படுகின்றன. தசரதனின் மந்திரிசபையில் ஜாபாலி என்ற பார்ப்பனரும் இடம் பெற்றிருந்தார். இவர் பார்ப்பனர்க்கென விதிக்கப்பட்ட எந்தச் சடங்கையும் செய்யாதவர். என்னையும் தண்ணீரையும் என் விரல்கள் தொட்டதே கிடையாது என்றே அவர் கூறியுள்ளார்.

மன்னனாக மகுடம் சூடவேண்டிய ராமன் காட்டுக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்ட கதை தெரியும் அல்லவா? பட்டாபிஷேகத்திற்கு வசிஷ்டன் எனும் மாமுனி வைத்த முகூர்த்தமே பொய்த்துக் காட்டுக்குப் போகவேண்டிய கஷ்டகாலம் வந்துவிட்ட பிறகும்கூட, நல்ல நாள், கெட்ட நாள் பார்க்கும் மடத்தனம் போகவில்லையே! என்பதையெல்லாம் ராமனுக்கு எடுத்துச் சொல்லிய ஜாபாலி வைதீகக் கருத்துகளைச் சாடி, உலகாயதக் கருத்துகளை எடுத்துக் கூறியதாக ராமாயணம் கூறுகிறது. பல லட்சம் வருடங்களுக்கு முன்பே ராமாயணக்கதை நடந்ததாக நம்பினால், அப்போதே கடவுள் மறுப்புக் கொள்கையும் நிலவி வந்ததாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஜாபாலியுடன் தந்தை பெரியாரை ஒப்பிட்டு ராஜாஜி தம் கல்வி ஏட்டில் எழுதியதை நினைவு கூரலாம். தமிழ்நாட்டு ஜாபாலி பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க என்று அவர் வாழ்த்துக் கூறி எழுதினார்.

அந்த ஜாபாலி கூறுகிறார்: தசரதன் இறந்து மகாபூதங்களில் கலந்துவிட்டது. எல்லா உயிர்களின் நிலையும் அதுவே! அஷ்டகா சிரார்த்தம் என்றும் சம்வத்சர சிரார்த்தம் என்றும் செய்யப்படும் சடங்குகளில் படைக்கப்படும் உணவுகளை இறந்தவர் யாரும் தின்பதைக் கண்டவர் உண்டா? சோறுதின்பவன் வயிற்றில் போகும் உணவு செத்தவனுக்குத் திருப்தி அளிக்கும் என்பது உண்மையானால், வெளியூருக்குப் போகும் நம் உறவினர்க்காக நாம் இங்கேயே சாப்பிட்டு விடலாமே!

யாகங்களைச் செய்யவும் தானங்களைக் கொடுக்கவும் இந்திரியங்களை அடக்கித் தவம் செய்யவும் தேவதைகளுக்குப் பூஜை செய்யவும் உபதேசிக்கும் சரித்திரங்களை எழுதியவர் யார்? பிறரை ஏமாற்றிக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு இம்மாதிரி விதிகளை ஏற்படுத்தி நம்புமாறு கூறி ஏமாந்த மூடர்களை வளைத்துப் போடுகிறார்கள்.

ராமா! நீ புத்திசாலியாக இருந்தும் பரலோகம் உண்டு என்று நம்புகிறாயே! பரலோகம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று கூறினார். (வால்மீகி ராமாயணம் _ அயோத்தியா காண்டம் சருக்கம் 108)

 

– சு.அறிவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *