Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஈரோட்டுச் சூரியன் – 6

இராமசாமியின் படிப்பு
நிறுத்தப்பட்டது;
கொஞ்சமாய்
நாயக்கரின் மனம்
வருத்தப்பட்டது;

மண்டிக்கடைக்கு
இராமனை
அழைத்து வந்தார்;
மண்டியைப் பார்த்த
இராமன் முதலில்
மலைத்து நின்றார்;

நாயக்கர் தொழிலைக் கற்றுத்தர
இராமன்
அழகாய்ப் பெற்றுக்கொண்டான்..

இராமன்
கூலம்தனை விற்க
கூவிக்கூவி
ஏலம்தனைப் போட்டான்..

எந்த வியாபாரியாக
இருந்தாலும் மண்டிக்கு
வந்த வியாபாரியை
பொருட்களை வாங்க வைப்பான்; தனது பேச்சைக் கேட்க
அவர்களை
ஏங்க வைப்பான்;

இராமனின்
பேச்சைக்கண்டு
நாயக்கர்
பயந்து போனார்;
அப்பேச்சால்
வியாபாரம்
பெருகுவதைக் கண்டு
வியந்து போனார்;
வியாபாரம்
பெருகியது;
நாயக்கர் மனம்
இறைவனிடம்
மருகியது;

வியாபாரம்
பெருகக் காரணம்
இராமனின் பேச்சு;
நாயக்கர் நம்பியதோ
இறைவனின் மூச்சு;

வியாபாரம் பெருகக் காரணம்
நாயக்கரின்
தரமான பொருள்;
நாயக்கர் நம்பியதோ
எல்லாம்
இறைவன் அருள்;

மனித மூளையையும்
உழைப்பைவிடவும்
இறைவன் பார்வைக்கே
சக்தி அதிகம்
என்று நினைத்தே
நாயக்கர் மனதில் ஏற்பட்ட
பக்தி அதிகம்..

நாயக்கர்
கேட்டதற்கிணங்க
செவி சாய்த்தவன்
இந்த இராமன்
செவி சாய்த்தவன்
அந்த இராமன் என்ற
நாயக்கரின் நம்பிக்கையோடு
சின்னத்தாயம்மையும் சேர்ந்தார்;
இருவரையும் இராமன் கூர்ந்தார்;
அடங்காதவன்
வீட்டிற்குள்
முடங்காதவன்
இந்த இராமன்
என்ற எண்ணம்
நாயக்கரிடம் தளர்ந்தது;
இராமன் மேலான
நம்பிக்கை மனதில்
புலர்ந்தது;

இராமனின் வியாபார யுக்தி கண்டு
நாயக்கர் பாராட்டுவார்;
இந்த இராமனுக்கு
திறமைத் தந்தவன்
அந்த இராமன் என
பக்தியால்
அவனை சீராட்டுவார்;

– மதுமதி