ஈரோட்டுச் சூரியன் – 3

அக்டோபர் 16-31

பாட்டியின் வீட்டில் இராமன்

ஆண் இரண்டு
பெண் இரண்டு
வெங்கட நாயக்கரின்
மனம் திளைத்தது;
மகிழ்ச்சியில்
களைத்தது;

நாயக்கரின் சிற்றன்னைக்கோ
இல்லை பிள்ளைப்பேறு;
அவரின் பசியைத் தீர்ப்பதோ
கஞ்சிச் சோறு;
இல்லையவரிடம்
பெருமளவு சொத்து;
இராமனைக் கேட்டார் தத்து;

வெங்கட நாயக்கரோ
மறுப்பு தெரிவிக்கவில்லை;
சின்னத்தாயம்மையோ
விருப்பு தெரிவிக்கவில்லை;

சிற்றன்னையின் நிலைமையை சின்னத்தாயம்மையிடம்
எடுத்துக் கூறினார்;
பதிலுக்கு அவர் சீறினார்;

சிற்றன்னையின்
தனிமையைப் பார்!;
நம்மை விட்டால்
ஆதரவுதான் யார்?;

சின்னத்தாயம்மையின்
மனதைப் பிசைந்தார்;
அவர் மெல்ல
இசைந்தார்;

தத்தாகக் கொடுக்க
மறுப்பைச் சொல்லுங்கள்;
ஆயினும் அவர் வீட்டில்
வளர்க்கச் சொல்லுங்கள்;

நாயக்கரின் சிற்றன்னை இராமனைத் தூக்கிச் சென்றார்..
அவரது மனம் மகிழ்ந்தது;
பின் நெகிழ்ந்தது;

தாய்ப்பால் வேண்டி இராமன் அழுத போதெல்லாம்
பசியை ஆட்டுப்பாலே தீர்த்தது;
பசியடங்கிய இராமனின் பார்வை பாட்டியை தாயாய்த் தான் பார்த்தது;

தமயனும்
தமக்கைகளும்-அங்கே
அறுசுவை உணவை
உண்டனர்;
புத்தாடைகள்
உடுத்திக் கொண்டனர்;

 

இங்கே..
அறுசுவை உணவல்ல
சிறு சுவை உணவுதான்..
பழைய சோறும்
சுண்டக்கஞ்சியும் தான்..
சுவை சுமாராய்-ஆயினும்
சுகாதாரமாய்..

தின்பண்டங்களுக்கு
திண்டாடுவார்;
கிடைத்தால் போதும்
கொண்டாடுவார்:

பாட்டியோ
பாசத்தைக் காட்டியே
பசிதனைக்கூடப் போக்குவார்;
பெற்ற மகனைப் போலவே
இராமனை நோக்குவார்;

செல்வத்தைக் காட்டி இராமனை வளர்க்கவில்லை
அதிக செல்லத்தை ஊட்டி வளர்த்தார்..

இராமனின்
ஆறாவது வயதில்
நாயக்கர் சொல்லி
இராமனைக் கொண்டு சேர்த்தார்
திண்ணைப்பள்ளி; தந்தையின்
சிற்றன்னை
மகனுக்கும் சிற்றன்னை ஆனார்;
மகன் மேல்
அவர் வைத்த பாசங்கண்டு
சின்னத்தாயம்மை
மனம் மகிழ்ந்து போனார்;

– மதுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *