‘டிபார்ட்மெண்டு’க்கு ஒரு கடவுளா ? மக்களை ஏமாற்றும் மகாமோசடி !-மஞ்சை வசந்தன்

2024 ஆகஸ்ட் 1-15, 2024 முகப்பு கட்டுரை

இந்த மண்ணில் பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டம் இம்மண்ணுக்குரிய மக்களை இன்றளவும் அடக்கி, ஆதிக்கம் செலுத்திவருகிறது என்றால் அதற்கு ஒரே காரணம், கடவுள் என்ற மூடநம்பிக்கையை, சடங்கு சம்பிரதாயங்களை, கோயில்களை உருவாக்கி, அவர்கள் மூளைக்கு விலங்கிட்டதேயாகும்.

கடவுள்கள் மூலம் நாம் பல நன்மைகளைப் பெறலாம். சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெறலாம். அதற்கு அந்தந்தக் கடவுளுக்கு வேண்டுதல், பூசை, வழிபாடு போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மை மக்கள் மத்தியில் பதித்து, அதன்வழியில் அவர்களைச் சுரண்டவும், சிந்தனையற்றவர்களாகவும் வழிவகை செய்துகொள்கின்றனர். அறிவியல் வளர்ச்சியில்லா அக்காலத்தில்தான் அப்படிச் செய்தார்கள் என்றில்
லாமல், அறிவியல் உச்சமும், படிப்பும், விழிப்பும் ஏற்பட்டுள்ள இக்காலத்திலும் அதைச் செய்கின்றனர் என்பதே வேதனைக்கும் வியப்புக்கும் உரியதாகும்.
ஆட்டுமந்தைகளாக, கண்ணை மூடிக்கொண்டு மக்கள் செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, அவர்களை மூடச்செயல்களைத் தொடர்ந்து செய்யும் நிலைக்கு ஆளாக்கிவிட்டனர்.

கருங்காலிக் கட்டையில் மாலை செய்து மாட்டிக்கொண்டால் தொழில் வளரும்; படிப்பு வரும்; வெற்றி கிட்டும்; செல்வம் பெருகும்; பிரச்சனை தீரும் என்று சொன்னவுடன் இந்த மக்கள் அதையும் நம்பி ஆளாளுக்கு அதை மாட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

மாட்டிக் கொண்டவர்களுக்கெல்லாம், நல்லது நடக்கிறதா என்றால் இல்லை. இல்லையென்று தெரிந்தும், நல்லது நடக்காதா என்கிற நப்பாசையால் தொடர்ந்து அம்மூடச் செயலைச் செய்கின்றனர்.

கருங்காலி மாலையே எல்லாவற்றையும் தந்துவிடும் என்றால், அதை மாட்டிக்கொண்டே எல்லா நன்மைகளையும் பெற்றுவிடலாமே! சிக்கல் களிலிருந்து விடுபடலாமே! ஒரு வழக்கில் வாதி, பிரதிவாதி, இருவரும் வெற்றி பெற கருங்காலி மாலையை மாட்டிக்கொண்டால் யாருக்கு வெற்றி கிடைக்கும்? கருங்காலி மாலை வெற்றியைத் தரும் என்றால் இரண்டு தரப்பும் வெற்றி பெற வேண்டும். அது முடியுமா? சாத்தியமா? அப்படியிருக்க இந்த மூடநம்பிக்கை உண்மைக்குப் புறம்பானது. அதனால் எந்தப் பயனும் கிடைக்காது என்பதை உணர்ந்து நடக்கவேண்டாமா?

மக்கள் இந்தத் தெளிவைப் பெறக்கூடாது என்பதற்காக ஒரு சுயநலக்கூட்டம் இக்காலத்திலும் மூடநம்பிக்கையை வளர்ப்பதில் முனைந்து நிற்கிறது. ஆரிய பார்ப்பன நாளேடு ஒன்று இப்போதுகூட தனது நாளோட்டில் தினம் தினம் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்பி மக்களை மூடச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு கடவுள் தீர்வு தரும் என்று தினம் ஒரு கடவுளை அறிமுகப்படுத்துகிறது. இதோ, அவற்றுள் சில…
நிலப் பிரச்சினை தீர…

“வீடு, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு இனி கவலை இல்லை. விழுப்புரம் வராகி கோயிலுக்குச் செல்லுங்கள்; உடனடித் தீர்வு கிடைக்கும் என்கின்றனர்.

அத்தி மரத்தால் செய்த 8 அடி உயர வராகி சிலை இங்கு உள்ளது. வராகி அம்மனுக்காகக் கட்டப்பட்ட முதல் கோயில் இது என்றும்,
அஷ்டவராகிகளை ஒரே இடத்தில் இங்கு தரிசிக்கலாம்; பூமாதேவியின் அம்சமான இவளை வழிபட்டால் வீடு, மனை, வயல் வாங்கும் யோகம் உண்டாகும்; உயிர்களுக்கு எல்லாம் தாயான ராஜராஜேஸ்வரியின் குதிரைப் படையின் தலைவியாகவும், திருச்சானூரில் குடியிருக்கும் பத்மாவதி தாயாரின் அந்தப்புரத்தின் காவல் தெய்வமாகவும் இருப்பவள் இவள், என்றும்
இக்கோயிலில் மகா வராகி, ஆதிவராகி, ஸ்வப்ன வராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாரூடா வராகி, மகிஷாரூடா வராகி, அச்வாரூட் வராகி என்னும் எட்டு அம்மன்கள் உள்ளனர். இவர்களைத் தரிசித்தால் பொன் பொருள் சேரும்.” என்றும் கூறுகின்றனர்.

குழப்பம் தீர…

“ஒரு செயலைச் செய்வோமா… வேண்டாமா.. என மனம் குழம்புகிறதா… தர்மபுரிக்கு அருகில் உள்ள நல்லம்பள்ளி ‘கரூர் மாரியம்மனிடம்’ பூவாக்குக் கேட்டால் குழப்பம் தீரும். என்றும்,
கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் காலத்தில் உருவான கோயில் இது. முன்பு கரூரில் இருந்த இந்த அம்மன் கோபித்துக் கொண்டு இங்கு வந்தாள். இன்னும் அவளின் உக்கிரம் தணியவில்லை. திங்கள், வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. நிலம் வாங்க, கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என அனைத்திற்கும் பூ வாக்குக் கேட்டு உத்தரவு பெறுகின்றனர். அம்மை, கண் நோய உள்ளிட்ட பிரச்சினைகள் தீர அபிஷேக தீர்த்தத்தைத் தலைமீது தெளிக்கின்றனர். பொங்கல் படைத்து, எலுமிச்சை மாலை சாத்துகின்றனர்.

குழந்தை வேணுமா…

“குழந்தை இல்லாதவர்களின் வேதனை சொல்லி மாளாது. அக்குறையை ஈரோடு மாவட்டம் நஞ்சமடைக்குட்டை கருமாரியம்மன் தீர்க்கிறாள்; இவளை ஆடிவெள்ளியன்று தரிசிப்பது விசேஷம்.
வேப்ப மரத்தடியில் கருமாரியம்மன் சிலையை வைத்து சிலர் வழிபட்டு வந்தனர். நாளடைவில் அது கோயிலாக உருவானது. நாகதோஷம் உள்ளவர்கள் அம்மனுக்குப் பால் அபிஷேகம் செய்கின்றனர். ராகு காலத்தில் வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் தொல்லை குறையும். திருமணம் நடக்கவும், குழந்தை வரம் பெறவும் அமாவாசை, வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. மாசித் திருவிழாவன்று பொங்கல் வைக்கின்றனர்.

திருமணம் நடக்க…

“திருமணம் நடக்கவில்லையே என்ற பெண்களின் வேதனையைப் போக்கி சந்தோஷமான வாழ்வைத் தரக் காத்திருக்கிறாள் கோவை கோனியம்மன்.முன்பு காடாக இருந்த இப்பகுதியை இருளர்களின் தலைவன் கோவன் ஆட்சி செய்தார். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. அம்மனுக்குப் பூஜை செய்ததால் மழையும் பெய்தது. இதன் பிறகு இருளர்கள் குலதெய்வமாக அம்மனை ஏற்றனர். பிற்காலத்தில் இப்பகுதியை மன்னர் இளங்கோசர் ஆட்சி செய்த போது, சேர மன்னர் ஒருவர் படை எடுத்தார். அம்மனின் அருளால் போரில் இளங்கோசர் வெற்றி பெற்றார். பின்னர் கோவையின் மய்யப் பகுதியில் புதிய கோயிலைக் கட்டினார். இதுவே தற்போதுள்ள கோனியம்மன் கோயில்.

இங்கு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்; குழந்தைப்பேறு கிடைக்கும்; நோய் தீரும். அம்மன் அருளால் திருமண வரம் பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர். கூடையில் உப்பை நிரப்பி, அதன் மீது மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைத்து திருமணத் தேதியை உறுதி செய்கின்றனர். பஞ்சமுக விநாயகர், நவக்கிரக சன்னதி இங்குள்ளது.” என்றும் கூறுகின்றனர்.

சாதிக்க…

சாதிக்க வேண்டும் என நினைப்பவரா… திருச்சி சமயபுரம் மாரியம்மனைத் தரிசியுங்கள்.
வைஷ்ணவி என்ற மாரியம்மனின் சிலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்பு இருந்தது. அதன் உக்கிரத்தைத் தாங்க முடியாததால் அதை வேறிடத்திற்கு எடுத்துச் சென்றனர். எடுத்துச் செல்லும் போது ஓரிடத்தில் இளைப்பாறினர். அந்த இடமே ‘இனாம் சமயபுரம்’ .
பின்னர் அதை தற்போது கோயில் உள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்தனர். அப்பகுதியில் வசித்த மக்கள் இவளை ‘கண்ணனூர் மாரியம்மன்’ என அழைத்தனர். இச்சமயத்தில் விஜயநகர மன்னர் இங்கு வழிபட்டு போரில் வென்றதால் கோயிலைக் கட்டினார். இங்கு வேண்டினால் அறுவை சிகிச்சை செய்யாமலேயே நோய் குணமாகும். இங்கு மொட்டை அடித்து, தீச்சட்டி எடுத்து மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.” என்றும்,

நோய் தீர…

மதுரை வண்டியூர் மாரியம்மனைக் கும்பிடு. அவளின் கருணை உன் நோயைத் தீர்க்கும். காவல் தெய்வமான இவள் சிரித்த முகத்துடன் இடது காலைத் தொங்கவிட்டும், வலதுகாலை மடித்தபடி இருக்கிறாள். காலுக்குக் கீழே மகிஷாசுரன் இருக்கிறான். சுப நிகழ்ச்சிக்காக பூக்கட்டி அம்மனிடம் உத்தரவு கேட்கின்றனர்.

மதுரையைச் சுற்றியுள்ள கோயில்களில் விழா நடப்பதற்கு முன் முதல் பூஜையை இங்கு நடத்துகின்றனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைக் குடித்தால் அம்மை நோய் குணமாகும் என்கின்றனர்.
கண் நோய் தீர வெள்ளிக் கண்மலர், தோல் நோய் தீர உப்பும், மிளகும் காணிக்கை செலுத்துகின்றனர்.

வழக்கில் வெல்ல…

“கோர்ட், கேஸ் எனத் திண்டாடுகிறீர்களா… திண்டுக்கல் தெத்துப்பட்டியில் உள்ள ராஜகாளியம்மனைத் தரிசியுங்கள்.
மதுரையை ஆட்சி செய்த மன்னர் பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்குப் பிழைப்புத் தேடி வந்த கோவலன் மீது குற்றம் சுமத்தவே, தவறுதலாக மரண தண்டனை கொடுத்தார் மன்னர். நீதி கேட்டு கண்ணகி முறையிட தவறை உணர்ந்த மன்னர் உயிர்விட்டார். ஆனாலும் கோபம் அடங்காமல் மதுரையை எரித்தாள் கண்ணகி.

அப்போது மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி காட்சியளித்து, அவளின் முன்வினையே காரணம் என விவரிக்க, கண்ணகியின் கோபம் தணிந்தது. அப்போது மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் காட்சியளித்து, ‘சித்தரான போகர் தவம் புரியும் காட்டிற்குச் சென்று தங்கு; பாண்டியன் நெடுஞ்செழியன் அடுத்த பிறவியில் உனக்கு கோயில் கட்டி பரிகாரம் தேடிக் கொள்வான்’ எனத் தெரிவித்தார். கண்ணகியே இங்கு ராஜகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்கின்றனர்.

குறையின்றி வாழ…

திருவண்ணாமலை அருகிலுள்ள படவேடு ரேணுகாம்பாள், தன்னை நாடி வருவோரின் குறைகளைப் போக்கி நிம்மதி தருகிறாள்.
சுயம்பு வடிவில் தலையை மட்டும் அடையாளமாகக் கொண்ட இவள், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகள் உடனிருக்க ‘அனைத்திற்கும் ஆதாரம் நானே’ என உணர்த்துகிறாள். ஜமதக்னி முனிவரின் மனைவியும், மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் தாயும் ஆக இருப்பவள் ரேணுகாம்பாள்.

இவளை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட புண்ணியம் சேரும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஜனஆகர்ஷன சக்கரம் இங்கு உள்ளது.
ஜமதக்னி முனிவர் ஆசிரமத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணே திருநீறாகத் தரப்படுகிறது. இதனால் பிணிகள் தீரும். தீயசக்தி அண்டாது.

திருஷ்டி நீங்க…

“திருஷ்டி தோஷத்தால் குழந்தைகள் அடம் பிடிக்கும். இக்குறையைப் போக்குகிறாள் திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன்.
காளியின் அம்சம் கொண்ட இவளுக்கு, புட்டு படைக்கப்படுவதால் ‘பிட்டாபுரத்து அம்மன்’ எனப் பெயர் பெற்றாள். இவளுக்கு மாதப்பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாயன்று சிறப்புப் பூஜை நடக்கிறது.

அம்மனுக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி அகோர விநாயகர் இருக்கிறார். இவரின் கைகள், துதிக்கை துண்டித்தபடி இருப்பதால் இப்பெயர் வந்தது.
இவரின் முன் குழந்தைகளை கிடத்தி, வேர் கட்டி, மை இடுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் வேர் கட்டலாம். இதனால் நோய்கள், சீர்தட்டுதல் மறையும். என்கின்றனர். திருஷ்டி, பீடை, தீயசக்தியைப் போக்க மந்திரம் ஓதி தீர்த்தம் தெளிக்கின்றனர் என்கிறது அந்த நாளேடு. தினம் ஒரு கடவுளை அறிமுகப்படுத்தி வரும் அந்நாளேடு மேலும் சில கடவுள்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தையை கடவுள் தந்தால் கருத்தரிப்பு மய்யங்கள் ஏன்? மூடிவிடலாமே! திருமணம் கடவுளால் நடக்கும் என்றால் திருமண ஏற்பாட்டு நிலையங்கள் எதற்கு? வெற்றி பெற கடவுள் உதவும் என்றால் இரண்டு தரப்பும் வேண்டிக்கொண்டால் கடவுள் என்ன செய்யும்? நோய்களைக் கடவுள் தீர்க்கும் என்றால் மருத்துவமனைகள் எதற்கு? வழக்கில் வெல்ல கடவுள் உதவும் என்றால் இரண்டு தரப்பும் வேண்டிக்கொண்டால் இரண்டு தரப்பும் வெல்லுமா? சிந்திக்க வேண்டாமா?

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கடவுள்!

பக்தனுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ பகவானுக்கு துறைவாரியாக பணி ஒதுக்கிச் சுரண்டுகின்றனர். அதையும் நம்பி அப்பாவி மக்கள் ஆட்டுமந்தைகளாய் அணிவகுத்துச் செல்கின்றனர். அந்த அவலம் பற்றும் கீழே படியுங்கள்!
காசநோய் – வைத்தீஸ்வரன் கோயில் (சீர்காழிக்கருகில்)
தோல்நோய் – 1. திருக்கட்சூர் மருந்தீசர் (சிங்கப்பெருமாள் கோயில் அருகில்), 2. திருவேற்காடு (வேதபுரீஸ்வரர்), 3. திருத்துருத்தி உத்தவேதீஸ்வரர் (மயிலாடுதுறை அருகில்)
இதயநோய் – திருநின்றவூர் (இருதயாலீசுவரர்)
மனநோய் – திருவிடைமருதூர் மருந்தீசர்
மன அழுத்தம் – திருவலிவலம் (திருவாரூர் அருகில்)
தொழுநோய் – தண்டலைச்சேரி (திருவாரூர் அருகில்)
வெண்புள்ளி – தலையாலங்காடு (திருவாரூர் அருகில்)
கண்நோய் – 1.திருவாரூர் துர்வாஸ்நாதர்,
2. கண்கொடுத்தவனிதம் (திருவாரூர் அருகில்)
காதுநோய் – அன்பில், செவிசாய்த்த வினாயகர் (திருச்சிக்கு அருகில்)
ஊனம் – 1. திருப்பெருவேளூர் சரஸ்வதீஸ்வரர் (கும்பகோணம் அருகில்),
2.திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் (கும்பகோணம் அருகில்)
நரம்புத்தளர்ச்சி – திருபுவனம் (மயிலாடுதுறை அருகில்)
வலிப்பு நோய் – திருவாசி
(திருச்சிக்கு அருகில்)
பக்கவாதம்- 1. திருந்துதேவன்குடி (கும்பகோணம் அருகில்),
2. திருவாதவூர் (மதுரை மேலூருக்கு அருகில்)
வயிற்றுவலி – திருவதிகை
(பண்ருட்டி அருகில்)
சர்க்கரை நோய் – கோவில்வெண்மணி கரும்பேஸ்வரர் (நீடாமங்கலம் அருகில்)
புற்றுநோய் -திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் (திருச்சிக்கு அருகில்)
பால்வினை நோய் – கஞ்சனூர் (ஆடுதுறை அருகில்)
கருப்பை நோய் – 1. கடுவாய்க்கரை புத்தூர் (கும்பகோணம் அருகில்),
2. திருக்கருகாபூர் (கும்பகோணம் அருகில்),
3. திருச்சி தாயுமானவர்
குழந்தை மருத்துவம் – சிவபுரம் (கும்பகோணம்)
முதுமை நீங்க – அவளிவநல்லூர் (தஞ்சைக்கு அருகில்)
உடலழகு – திருக்கொட்டையூர் (சுவாமிமலை அருகில்)
போதை மோகம் – திருப்பாம்புரம் (திருவாரூர் அருகில்)
நஞ்சு நீங்க – பூவனூர் (திருவாரூர் அருகில்)
சோர்வு – திருவெறும்பூர் (திருச்சி அருகில்)

பிள்ளை பெற:

அகோபில நரசிம்மரை மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், பிள்ளை கட்டாயம் உண்டாகுமாம். உத்தரவாதம்(காரண்டி) கொடுக்கிறார்கள்!

அதைத் ‘தமிழ்முரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்!

ஈஸ்வரன் ஒருவரா? பலரா?

புராணப்படி, மூடநம்பிக்கைப்படி பார்த்தாலும் ஈஸ்வரன் எனப்படும் சிவன் ஒருவன்தானே? அப்படியிருக்க அவனே பல ஊரில் பல பெயர்களில் பல நோய்க்கு வைத்தியம் பார்க்கிறான் என்றால் அது மோசடியல்லவா? முதலில் அவனை சுகாதாரத்துறை கைது செய்ய வேண்டாமா?

என்னென்ன நோய் உண்டோ அத்தனைக்கும் ஒவ்வொரு ஊர் ஈஸ்வரர் என்று அடையாளப்படுத்தி மக்களை அலையவைப்பது பக்தியின் பெயரால் செய்யப்படும் சுரண்டல், கொடுமை அல்லவா?

ஜுரத்துக்கு மட்டும் 16 ஊர்களில் ஈஸ்வரன் வைத்தியம் பார்க்கிறார் என்று ஒரு பட்டியலே கொடுக்கிறார். ஜுரம் அடிக்கடி வரும் என்பதால் அந்தந்தப் பகுதியில் வைத்தியம் பார்த்துக் கொள்ள வசதி செய்து கொடுக்கிறார் இந்த வைத்தியர்.

இப்படி எல்லா நோயையும் ஈஸ்வரன் குணப்படுத்துகிறான் என்றால், எல்லா மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும், மூடிவிட்டு, மருத்துவப் படிப்பையே நிறுத்தி விடலாமே!
இத்தோடு விட்டார்களா?

விசா கொடுக்க ஒரு கடவுள்,
பாஸ்போர்ட்டுக்கு ஒரு கடவுள்!
அதிர்ச்சியாய் இருக்கிறதா?
அடியில் படியுங்கள்!

பாடிகாட் முனீஸ்வரன்:

சென்னை பார்க் டவுனில் பல்லவன் சாலையில் உள்ளது இக்கோயில்.

இக்கடவுளை வணங்கினால், வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்லுமாம். ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் பயிற்சி, சாலை விதி, போக்குவரத்து காவலர்கள் எல்லாம் தேவையில்லை. இந்தக் கடவுளை வணங்கிவிட்டால் வாகனம் பாதுகாப்பாக ஓடிவிடும்!

கிரிக்கெட் கணேசா:
அண்ணா நகர் (கிழக்கு). இந்த வினாயகரை வேண்டினால் வேண்டுகின்றவர் அணி வெற்றி பெறுமாம்! இரண்டு தரப்பும் வேண்டினால் இரண்டு தரப்புக்கும் வெற்றி கிடைக்குமா? இப்படி புத்தியோடு கேள்வி கேட்டால் பக்திக்கும் பகவானுக்கும் வேலையில்லையே!

யோக ஹயக்கிரீவர்:

(காஞ்சிபுரம் மாவட்டம், செட்டி புண்ணியம்) தேர்வில் வெற்றி பெற இந்தச் சாமியைக் கும்பிட வேண்டுமாம்! அப்புறம் எதற்குப் படிக்கணும்?

அமெரிக்க ஆஞ்சனேயர்:

(நங்கநல்லூர், எம்.எம்.டி.சி.காலனி) வெளிநாட்டுக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்தக் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டுமாம்! அது மட்டுமில்லீங்க. வெளிநாடு போக பாஸ்போர்ட், விசா வேண்டுமல்லவா? அதற்கும் கடவுள் உண்டு!

ஸ்ரீலட்சுமி விசா கணபதி:

(பழவந்தாங்கல்-பிருந்தாவன் நகர்) பாஸ்போர்ட், விசா வேண்டுவோர் இங்கு சென்று வேண்ட வேண்டுமாம்! எப்படீங்க.. இன்றைய மக்களுக்கு என்னென்ன தேவையோ அதற்கெல்லாம் ஒரு கடவுளை உண்டாக்கி, அதை வழிபட்டால் எல்லாம் நடக்கும் என்று பிரச்சாரம் செய்து மக்களைச் சுரண்டும் இந்த அயோக்கியர்களை அரசு நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள வேண்டாமா?

அரசாங்க வேலைக்குக் குறுக்கே கடவுள் புரோக்கரா? அப்போ பிரார்த்தனை இலஞ்சமல்லவா? இதைவிட யாராவது கடவுளை இழிவுபடுத்த முடியுமா?

ஏமாற்றுகிறார்கள்! ஏமாறலாமா?

கடவுளை நம்புதல் என்பது வேறு; கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் நம்புதல் என்பது வேறு. கடவுள் இல்லை என்று முடிவுக்கு
வருவதற்கு ஆழ்சிந்தனையும், பகுத்தாய்வும் கட்டாயம். அந்த அளவிற்குப் பகுத்தறிந்து வாழமுடியவில்லை யென்றாலும் மந்தை மனப்பான்மையுடன் மடமை
களை நம்பி வாழாமலாவது இருக்கலாம். அல்லவா?

கடவுள்பற்றி நாம் வாதம் புரிந்தால் முதலில், புராணங்கள் பொய் என்பதை ஒத்துக்கொள்வர். இன்னும் தொடர்ந்து வாதிட்டால், பல கடவுள் இல்லை என்பதை ஏற்பர். மேலும் வாதிட்டால் ஆண் கடவுள், பெண் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவம் இல்லை என்பதை ஒப்புவர். இறுதியாக கடவுள் சக்திமயமானது. அது அனைத்திலும் இரண்டறக் கலந்தது என்பர். அப்படியென்றால் பல கடவுள், ஆண் கடவுள், பெண் கடவுள் இருப்பதாக நம்புவதும், அக்கடவுள்களை நாடிச் செல்வதும் தப்பு என்று ஆகிறது.

சக்தி மயமான, அனைத்திலும் கலந்த கடவுள்தான் உண்டு என்று கூறிவிட்டு, ஆயிரக்கணக்கில் ஆண் கடவுள்களையும் பெண் கடவுள்களையும் உருவாக்கி, அவற்றிற்குக் கோயில்கள் கட்டி ஒவ்வொன்றுக்கும் ஒரு மகத்துவம் உண்டு என்று கூறுவது பித்தலாட்டம்தானே?

அண்டத்தில் உள்ள அனைத்தும் அதுவேயான ,சக்திதான் கடவுள் என்று கூறிவிட்டு, அதற்கு உருவமும், ஆண்- பெண் பாகுபாடும் கூறி, ஆயிரக்கணக்கான கடவுள்களை உருவாக்கி, அவற்றிற்குத் திருமணம், பிள்ளைப்பேறு என்று கூறுவது அறிவுக்கு உகந்ததா? சிந்திக்க வேண்டாமா?

கடவுள் சக்திமயமானது என்று கூறியபின் பல கடவுள் இல்லையென்பது உறுதியாகிறது. பல கடவுள் இல்லை என்பது உண்மையென்றால், ஊருக்கு ஒரு கடவுள்; ஒவ்வொரு நோய் தீர ஒவ்வொரு கடவுள்; ஒவ்வொரு சிக்கல் தீர வெவ்வேறு கடவுள் என்று எப்படி இருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்!

சக்தி மயமான ஒரே கடவுள் என்று கூறிவிட்டு,ஒரு கடவுள் நோய் தீர்க்கும், ஒரு கடவுள் கல்வி தரும், இன்னொரு கடவுள் செல்வம் தரும், மற்றொரு கடவுள் வீரம் தரும், வேறு ஒரு கடவுள் விசா கிடைக்கச் செய்யும்; அந்தக் கடவுள் பிள்ளை தரும், இந்தக் கடவுள் திருமணம் நடக்க உதவும் என்று வெவ்வேறு கடவுளைக் காட்டுவது பித்தலாட்டம் அல்லவா? கடவுள் சக்தி மயமானது என்பது உண்மையென்றால் இத்தனைக் கடவுள் எப்படி இருக்க முடியும்?

ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு கடவுள் என்றால் ஒரு கடவுளுக்கு உள்ள சக்தி இன்னொரு கடவுளுக்கு இல்லையென்று ஆகிவிடாதா? பல கடவுள் என்றால் ஒரு கடவுளுக்கு உள்ள சக்தி இன்னொரு கடவுளுக்கு இல்லையென்று ஆகிவிடாதா? பல கடவுள் கற்பித்து, ஒரு கடவுளுக்கு உள்ள சக்தி இன்னொரு கடவுளுக்கு இல்லையென்பது அவர்கள் நம்பும் கடவுளையே கேவலப்படுத்தும் செயல் ஆகாதா? இப்படி சுயநலத்திற்காகக் கடவுளைக் கேவலப்படுத்துபவர்களை பக்தர்கள் எதிர்க்க வேண்டாமா? கண்டிக்க வேண்டாமா?

இக்காலத்தில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட், பாஸ்போர்ட், மோட்டார் வாகனங்களுக்கெல்லாம் ஒவ்வொரு கடவுளைக் கூறி வருமானம் ஈட்டுவது எவ்வளவு பெரிய மோசடி! அது கடவுளுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் கூறுவதை நம்பி கூட்டம் கூட்டமாய்ச் செல்வது ஏமாளித்தனம் அல்லவா?

இப்படிச் சிந்தனையின்றி, கண்மூடித்தனமாய் நடந்துகொள்வதால்தான், கடவுளைக் கற்பித்து ஒரு கூட்டம் காலங்காலமாய் ஏமாற்றிப் பிழைப்பதோடு, பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தி, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திவருகிறது.

எனவே, பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்; அறிவுக்கு ஒவ்வாதவற்றை விலக்குங்கள்; மானஉணர்வோடு மனிதனாக வாழுங்கள். இந்த அறிவியல் உலகில் இப்படிப்பட்ட மடமைகளை நம்பினால் எதிர்கால உலகம் ஏளனம் செய்யாதா? சிந்திப்பீர்!