Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆர்க்காடு சர். ஏ.ராமசாமி

 

சர்.ஏ.ராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

1918இல் ராமசாமி முதலியார் அவர்கள், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோருடன் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளைப் பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார்.

நீதிக்கட்சியின் ‘ஜஸ்டிஸ்’ செய்தித்தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார். இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித்தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.

மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.

ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதார் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.

1925இல் சர். பி.டி.தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மகராஜ்  அவர்களையும் நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. டிசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடத்த பானகல் அரசருக்குத் துணை புரிந்தவர். பின்னர் தொடர்ந்து பல்வேறு அரசாங்கப் பதவிகளில் இருந்துகொண்டு சமூகநீதிக்குப் பாடுபட்டவர். அவரது நினைவு நாள் ஜூலை 21.