Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

காவலர் பெரியார் !

“கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்’’
விடுகதை சொல்லிக் கொண்டிருந்தாள்
குழந்தை.

பெரியாரைப் பற்றி
கொஞ்சம் சொன்னேன்.

தமிழன் எப்போதும்
நூலிழையில்
உயிர் தப்புகிறான்.
ஒவ்வொரு முறையும்
அந்த நூலிழை
பூநூலிழையாக இருக்கிறது.

மதம் உன்னை
யோசிக்க விடாமல் தடுத்தது.
அந்த விஷப் பாம்பு
உன்னைக் கொத்த வரும்போதெல்லாம்
பெரியார்தான்
பாதுகாப்பாக இருந்தார்.

சாதி உன்னை
நூற்றாண்டுகளின்
இருண்டப் பள்ளத்தில்
தள்ளிவிட்டுச் சிரித்தது.

உனக்கான வெளிச்சம்
திருட்டுப் போகாமல்
பெரியார்தான்
காவலாக இருந்தார்.
ஆணாதிக்கம் உன்னை
அடுப்பங்கரையிலேயே
வைத்திருந்தது.
மீசை முளைத்த
கரப்பான் பூச்சிகளிடமிருந்து
உனக்கான விடுதலைக்கு
குரல் கொடுத்தவர் பெரியார்.

சொல்லி முடித்தவுடன்
பாடப்புத்தகத்தை எடுத்து
குழந்தை திருத்தி எழுதினாள்:
“கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்
பூட்டு இல்லை
பெரியார்!’’

நா.முத்துக்குமார்