நீதிக்கட்சியான திராவிடர் இயக்க ஆட்சியின் மகுடமுத்து போன்ற சாதனைகளில் முக்கியமானது, பலத்த எதிர்ப்புக்கிடையே, 2, 3 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு, (1925 முதல்) 1927ல் நிறைவேற்றப்பட்ட ‘தி மெட்ராஸ் ஹிந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்’ Act II of 1927 ஆகும்.
இச்சட்டத்தின்படி, கோயில்கள், மடங்கள் ஆகியவை தங்கள் சொந்த சொத்துக்கள் போல் பொதுச் சொத்துக்களை அனுபவித்ததையும், பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம்போல் பக்தியின்பேரால் சரண்டிக் கொள்ளையடித்ததையும் தடுத்து நிறுத்தி, தமிழ்நாடு (அப்போது சென்னை) அரசின் ஒரு துறையின்கீழ் _ வாரியம் அமைக்கப்பட்டு _ கண்காணிப்பு மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டது!
இதன் ஆணையராக, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மற்ற நீதிபதிகளும், சிறந்த அறிஞர்களான நிர்வாகிகளும் இருந்து, ஆங்காங்கு எல்லா வரவு_செலவுகளும் முறைப்படி நடந்து வருமாறு ஒழுங்குபடுத்தினார்கள்.
இதன் பணி என்பது, முழுக்க முழுக்க நிர்வாகப் பணிதானே ஒழிய, ஹிந்து மதப் பிரச்சாரம் செய்து, ஹிந்து மயமாக நாட்டை மாற்ற முயற்சிப்பது அல்ல!
அதனால்தான் அக்காலத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்கள் சத்தியமூர்த்தி அய்யர்களும், விஜயராகவாச்சாரி போன்ற பிரபல பார்ப்பனர்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர். காங்கிரசிலிருந்த நிலையிலேயே, தந்தை பெரியார் அவர்கள் இம்மசோதாவை பலமாக ஆதரித்து வரவேற்றார்.
இதற்காக, தந்தை பெரியார் அவர்களை சத்தியமூர்த்தி, ‘டையர்’ என்று வர்ணித்ததைக் கடுமையாக எதிர்த்து அச்சொல்லை வாபஸ் வாங்க வைத்தனர் தமிழர் தலைவர்களான காங்கிரஸ் பிரமுகர்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள்.
இச்சட்டம் பல எதிர்ப்புகளைத் தாண்டி முதல் அமைச்சர் பனகல் அரசரால், 1927இல் முழுமை பெற்று நிறைவேறியது.
அதன் விளைவுதான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் இன்று பல கோயில்களும், மடங்களும் வந்துள்ள நிலை!
இத்துறையின் பங்கும் பணியும் நிர்வாகம் மட்டும்தான் என்பதை அறவே மறந்துவிட்டு, அளவுமீறி, ஹிந்துமதச் சடங்கு, சம்பிரதாய பிரச்சார, பாதுகாப்புத் துறையாக இதனை மாற்றிடும் அளவுக்கு திராவிட இயக்க அரசுகளே கூட அறிஞர் அண்ணாவின் முதலமைச்சர் ஆளுமைக்குப் பின் சென்றுள்ளன. அப்போதே பலமுறை நாம் (தி.மு.க. ஆட்சியின்போதுகூட சுட்டிக்காட்டி) கண்டனமும் தெரிவித்தோம். அது ஓரளவுதான் பயன் தந்தது. ஆனால், அவ்வாட்சி செய்த சமூக சீர்திருத்தங்களில் ஒன்று அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம். இதன் திருத்தமாக வந்து உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது!
அதன்பின் வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு குறிப்பாக செல்வி.ஜெயலலிதா அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்’’ என்பதுபோல இத்துறையை முழுதும் பார்ப்பனியம் பலமாகக் கொழுக்கும் துறையாகவே மாற்றிவிட்டது!
எடுத்துக்காட்டாக சில:
1. மழைவேண்டி வருண ஜெபத்தை கோயிலில் செய்ய, இந்து அறநிலையத்துறை கமிஷனே சுற்றறிக்கை விட்டு நடத்தி வைத்தக் கூத்து, மதச்சார்பற்ற அரசின் தத்துவத்திறகு முற்றிலும் முரணானது.
2. திடீர் நடைபாதைக் கோயில்கள் பெருக்கத்தை அறநிலையத்துறை கீழ்க் கொண்டுவர எந்த முயற்சியும் செய்யாததும் (நீதிமன்ற ஆணைப்படி, அவற்றை அகற்றாத நிலையில்) முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.
3. தமிழ் அர்ச்சனைகள் வலியுறுத்தப் படுவதில்லை. (தி.மு.க. ஆட்சியில் இது கண்டிப்பாக இருந்தது.)
4. இப்போது இவ்வாண்டு பிரபல ராமேசுவரம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் _ அடுத்த மாதத்தில் 68_69 கோயில் கும்பாபிஷேகம் (முதல் அமைச்சர் ‘அம்மா’வின் 68 வயதுக்கு பக்திப் புண்ணியம் _ தேர்தல் வெற்றி _ இவைகளை மனதிற் கொண்டோ என்னவோ?) நடத்தப்பட்டு வருகின்றன!
தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையினர் அர்ச்சகர் நியமனம் பற்றிய அக்கறை காட்டாமல், கண்டும்காணாத நிலையில் உள்ளனர்.
ஆனால், இவற்றில் மட்டும் தனி முனைப்புடன் செயல்பட்டு, யாகங்கள் முதலியன நடத்துகின்றனர். அரசுப் பணத்தில் இப்படியா?
ஒரு பக்கம் பக்தி மூடநம்பிக்கை, இன்னொரு பக்கம், இது ஏன் 68, 69 என்று எண்ணிக்கை இப்போது என்ற சந்தேகம் விதைக்கப்பட்ட நிலை!
5. சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்களுக்குத் தாரைவார்க்க தமிழ்நாடு அரசு _ ஜெயலலிதா அரசு மிகவும் மறைமுக ஒத்துழைப்பைத் தரும் வகையில், உச்சநீதிமன்றத்தில் போதிய ஆர்வத்துடன் அரசு நிலைப்பாட்டை நிலைநிறுத்த வாதாடவில்லை என்பது உலகறிந்த ரகசியம் ஆகும்.
அறநிலையத் துறையின் பணி பற்றி அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த (1967) தி.மு.க. அமைச்சரவையில் இந்து அறநிலையப் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற நாவலர் நெடுஞ்செழியன் மிக அழகாக சிதம்பரத்திலே _ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் _ பேசும்போது 1967இல் விளக்கியது குறிப்பிடத் தகுந்ததாகும்.
“நான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றுவந்தேன்; எங்கே நெடுஞ்செழியன் பதவி கிடைத்தவுடன் மாறிவிட்டோனோ’ என்று நினைத்துவிடாதீர். எனது துறையின் பணியாற்றச் சென்றேன். சாமி கும்பிட அல்ல. அங்கே போடப்படும் படி அளவு 8 மரக்காலும் செலவழிக்கப்படுகிறதா? அல்லது 6 மரக்கால் செலவழித்து மற்ற 2 மரக்கால் காணாமற் போகிறதா என்று கண்காணிக்கும் ‘கணக்குப் பார்க்கும்’ வேலைக்காகத்தான் அங்கே சென்று திரும்பினேன்!’’ என்று சரியாக அதன் பணி பற்றி ஒரு விளக்கம் தந்தார்.
இன்றைய அண்ணா பெயர்கூறும் அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கடைப்பிடிக்காமல் இப்படி ஹிந்துமத சனாதன தர்மத்தின்படி 68, 69 கோயில்கள் என்று குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் ஈடுபடுவது எதைக் காட்டுகின்றது?
கடவுள் பெயரால் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத மந்திரிகளில் ஒருவர்தான் அன்றைய அறநிலையத் துறை அமைச்சர். ஹிந்து மதத்தில் கடவுள் இல்லை என்பவரும்கூட இருக்க இடம் உண்டே! எனவே, இதைப் புரிந்து செயல்பட வேண்டியதை விட்டு, எங்கோ செல்வது என்ன நியாயம்?
இந்து அறநிலையத்துறை, ஹிந்து மத பக்தி பிரச்சாரத் துறை அல்ல! புரிந்து கொள்க!
ஆசிரியர்,
கி.வீரமணி


Leave a Reply