Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறியப்படாத அதிக வேலைவாய்ப்புள்ள துறைகள்

– நேயன்

முதலில் படிக்கும்போதே நம் வேலைவாய்ப்புகள் பற்றி எதிர்கால இலக்குப்பற்றி முடிவு செய்து படிக்க வேண்டும். பெற்றோர் தான் இதில் எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தான் வேலைப் பார்க்கப் போகிறோம் என்றால் மாநிலக் கல்வி வாரியத்தில் (State Board), படிக்க வேண்டும். இந்தியா அளவில் வேலைக்குச் செல்ல சி.பி.எஸ்.ஸி; அய்.சி.எஸ். பாடமுறையைத் தேர்வு செய்ய வேண்டும். அயல் நாடு செல்ல அய்.ஜி.சி.எஸ்.  (International general certificate of secondary education)  தேர்வு செய்ய வேண்டும். எந்த பள்ளியில் படித்தாலும் எல்லா இடங்களுக்கும் செல்லலாம் என்றாலும் மேற்சொன்னபடி திட்டமிட்டு படித்தால் எளிதில் செல்ல வழிகிடைக்கும்.

அதேபோல் கல்லூரி படிப்புகளுக்குச் செல்லும்போது நண்பர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக அதில் சேர்வது; ஊர் சுற்றலாம் என்பதற்காகச் சேர்வது; கட்டுப்பாடு அதிகம் இருக்காது என்பதற்காகச் சேர்வது தவிர்க்கப்பட வேண்டும். நமக்கு விருப்பம், தகுதி, வேலைவாய்ப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். நம்முள் பலரும் அறியாத ஆனால், அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகள் சில உள்ளன. அவற்றை இனி பார்ப்போம். பெட்ரோலியம் இஞ்ஜினீயரிங்:

ப்ளஸ் டூ  வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களைப் படித்தவர்கள், பி.டெக்., பெட்ரோலியம் இஞ்ஜினீயரிங் படிக்கலாம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டட், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்களில் கெமிக்கல் இஞ்ஜினீயர், பிளாக் அனலிஸ்ட் போன்ற பணி வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுப் பெட்ரோலிய நிறுவனங்களிலும் வேலை பார்க்கலாம். ரூபாய் 10,000 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். சராசரியாக மாதம் ரூபாய் 50,000 சம்பாதிக்க வைக்கும் துறை இது.

உணவுத் தொழில்நுட்பம்:

ப்ள்ஸ் டூ  வில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி.எஸ்ஸி., ஃபுட் டெக்னாலஜி, பி.டெக்., ஃபுட் டெக்னாலஜி படிக்கலாம். இந்தத் துறையில் உணவுப் பாதுகாப்பு, பதப்படுத்துவது, விநியோகம், தரம் ஆராய்வது, பேக்கிங் என பல வேலைகள் உண்டு. தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன் உணவுப் பாதுகாப்புத் துறை, பால்வளத் துறை போன்ற அரசுத் துறைப் பணியும் பெறலாம். ஆராய்ச்சித் துறையிலும் செல்லலாம். மாதம் குறைந்தது 20,000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்.

கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்):

அரசு, தனியார் நிறுவனங்களில் அட்வைஸர், மேலாண்மை என உயர் பொறுப்புகளுக்குத் தகுதிப்படுத்தும் படிப்பு, கம்பெனி செக்ரட்டரி! பி.காம், எம்.காம் படித்துக்கொண்டே எக்ஸிகியூடிவ், புரொஃபஷனல் தேர்வுகள் எழுதலாம். ப்ளஸ் டூ முடித்தவர்கள்கூடஃபவுண்டேஷன் தேர்வுகள் எழுத முடியும். இவர்கள் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா (Institute of company secretaries of India) நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே 30,000 ரூபாய் முதல் சம்பளம் இருக்கு. சி.ஏ போல்தான் இந்த படிப்பும். இதற்கென இருக்கும் தனியார் இன்ஸ்டிட்யூட்களில் படிக்க முடியும். இதைத் தவிர, எம்.காம் முடித்துவிட்டு கார்ப்பரேட் செக்ரட்டரி கோர்ஸ் படிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

மருத்துவம்

மருத்துவம், செவிலியர் மட்டுமல்ல…, லேப் டெக்னாலஜி ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எக்கோ டெக்னாலஜி என இதில் பல நவீன தொழில்நுட்பப் பிரிவுகள் உள்ளன. எல்லா மருத்தவமனைகளிலும் இந்த வேலைவாய்ப்புக்கள் உண்டு. குறைந்தது ரூபாய் 10,000 ஆயிரம் முதல் சம்பளம் இருக்கும். வெளிநாடுகளில் இதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்தது ரூபாய் 50,000 முதல் சம்பளம் கிடைக்கும்.

ஜியாலஜிக்கல் சயின்ஸ்

ப்ளஸ் டூ-வில் அறிவியல் பிரிவுகள் படித்தவர்கள், பி.எஸ்ஸி., எம்.டெக். ஜியாலஜிக்கல் சயின்ஸ் படிக்கலாம். குறிப்பிட்ட பெரிய பல்கலைக்கழகங்களில் மட்டுமே வழங்கப்படும் இந்தப் படிப்பு. கடல், மலை, நிலம், பூகம்பம், நிலக்கரி போன்ற ஆராய்ச்சி, ஓர் இடத்தைப் பற்றிய டேட்டா சேகரிப்பது போன்றவை பணி இயல்பு. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு. சென்ட்ரல் கவர்ன்மென்ட் வாட்டர் போர்டு மற்றும் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என மத்திய அரசு பணிகளில் இடம் உண்டு.