இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை ஒன்றிய அரசு நிறைவேற்றுகிறதா என்கிற அய்யம் தீவிரமாக எழுந்துள்ளது. அதிகார பலம் மிக்க நாடுகளிடம் அடிபணிந்து போகக் கூடாது என்பது தான் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் இறையாண்மையின் அடிப்படை; அண்மைக் கால நடப்புகள் அப்படி இல்லை என்பது கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
உலகின் பல நாடுகளுக்கு வரியை உயர்த்துகிறோம் என்று அறிவித்தபோது, இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா திடீரென 50% வரி என்று அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள், வர்த்தகத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, மிரட்டுவது போலவே பேசி வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு இந்தியா இறக்குமதி செய்வது கூடாது என்று அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. (குறைந்த விலையில் இறக்குமதி செய்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. அவை பெரு முதலாளிகளுக்கே பயன்பட்டது என்பது வேறு விசயம்.)
கடந்த வாரத்தில், இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ஆகப் போகிறது என்று பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, அண்மையில் தங்கள் ஆளுகைக்குட்பட்டுள்ள வெனிசுலாவிடமிருந்து இறக்குமதி செய்யும் என்று அமெரிக்கா அறிவிக்கிறது, இந்தியா மவுனம் காத்தது.

பின்னர் இந்தியப் பிரதமர் மோடியுடன், தான் தொலைப்பேசியில் பேசியதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்ய மோடி ஒப்புக் கொண்டதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான வரிகளையும், இதர தடைகளையும் ‘ஜீரோ’வாகக் குறைப்பதற்கும் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அமெரிக்கா – இந்தியா இடையேயான ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் நாடு முழுவதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருள்களை 0% வரியில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இது இந்திய விவசாயிகளுக்குப் பேரிடியாக அமையும்.
அமெரிக்காவின் பெரு வணிக நிறுவனங்கள், இந்தியாவில் இறக்கு மதியை அதிகப்படுத்தினால், இந்தியாவின் விவசாயப் பொருள்களின் நிலை என்னாவது? அமெரிக்கப் பெரு நிறுவனங்களுக்கு முன் இந்திய விவசாயிகளால் போட்டி போட முடியுமா? என்பது முக்கியக் கேள்வியாகும்.
பருத்தி, ஆப்பிள் போன்ற பொருள்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளித்தால், ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்குப் பெருத்த பொருளாதார சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கக் கூட்டமைப்
பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பாக எத்தனால் தயாரிப்பின்போது கிடைக்கும் துணைப் பொருளான டிடிஜிஎஸ் (DDGS), கால்நடை தீவனத்திற்கான சிவப்புச் சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் மற்றும் கூடுதல் தயாரிப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய – அமெரிக்கக் கூட்டறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அவர்கள், கால்நடைத் தீவனச் சந்தையின் கட்டுப்பாடு அமெரிக்க நிறுவனங்களால் முழுமையாக ஏகபோகப்படுத்தப்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உற்பத்தியாகும் 44 மில்லியன் டன் டிடிஜிஎஸ்இல், 15 மில்லியன் டன் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளது. அதில் 25 சதவிகிதம் இந்தியாவிற்குள் வந்தாலே, இந்திய சோளச் சந்தை முற்றிலும் சரிந்துவிடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். அதில் ‘அப்லாடாக்சின்’ என்ற அளவு 20 பி.பி.பி. என்று குறைந்த அளவில் இருந்தாலும், ‘கிளைபோசேட்’ களைக் கொல்லிகளின் நச்சுத்தன்மை கூடுதல் என்று கூறுகிறார்கள்.
‘விவசாய மற்றும் பால் பொருள்கள் இந்த ஒப்பந்தத்தில் இல்லை’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறுவது தவறானது என்றும், பியுஷ் கோயல் பொய்யான தகவலைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என்றும், தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கையொப்பமிடுவதை பிரதமர் மோடி தடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்திய அளவில் பெரும் போராட்டம் நடப்பதைத் தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கோமாதா என்பது நாட்டு மாடு தான் என்றும், ஜெர்சி பசுக்கள் எனப்படும் அயல்நாட்டு மாட்டுவகைகளைப்
புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பேசுகிறது. ஆனால், இப்போது ஆர்.எஸ்.எஸ்.சையே ‘மாஸ்டர்’ டொனால்ட் டிரம்ப் அடக்கிவிட்டார் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்ய 0% என்று இருந்ததை 2019க்குப் பிறகு 3% ஏற்றினார்கள். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் 50% ஆக ஆக்கி, இப்போது அதை 18% ஆகக் குறைத்துள்ளார்கள். ஆக 0%லிருந்து 18% வரி இந்தியப் பொருள்களுக்கு உயர்த்தியுள்ளது அமெரிக்க அரசு. ஒட்டகத்தின் முதுகிலிருந்து சுமையை இறக்கிய கதை போன்று, பாசாங்கு காட்டியுள்ளது அமெரிக்கா.
அதே நேரம், அமெரிக்கப் பொருள்களுக்கு 30% முதல் 150% வரை விதித்துவந்த வரியை, இந்திய ஒன்றிய அரசு 0%ஆக ஆக்கியுள்ளது.

இந்த அளவுக்கு அமெரிக்காவுக்குப் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காவிடமும் பணிவு; இன்னொரு புறம் சீனாவிடமும் பணிவு. இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனராணுவம் நுழைவதாகத் தகவல் கிடைத்தாலும், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உண்மையை எடுத்துக் காட்டியுள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் நரவனேவின் புத்தகத்தை வைத்தும் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது. இது ஓர் இறையாண்மை மிக்க நாடு தானா?
ஏற்கெனவே, தான் தலையிட்டுத் தான் இந்தியா – பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலைத் தடுத்ததாக ஒன்றுக்குப் பல முறை பிரதமர் நரேந்திர மோடியின் ‘நண்பர்’ அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியபோதும், மறுப்பேதும் சொல்லாமல் ‘மவுன விரதம்’ கடைப்பிடித்தார் நரேந்திரமோடி! இப்போது, இந்தியாவின் வர்த்தக முடிவு இது தான் என்று அமெரிக்க அதிகாரிகளும், அதிபரும் அறிவிக்கின்றனர். என்ன கொடுமை இது!
விவசாயிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திய சட்டங்களை ஓராண்டுக்கும் மேல் போராடி, ஒன்றிய அரசைத் திரும்பப் பெற வைத்த அதே சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) என்ற விவசாயிகள் அமைப்புதான் இப்போதும் வெகுண்டு எழுந்துள்ளது. தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் சட்டத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, தொழிற்சங்கங்களால் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் தாங்களும் பங்கேற்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல், இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் சூழலில், அரசின் கொள்கை ரீதியான முடிவுகளை நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிவித்தது உரிமை மீறல் செயல்.
இந்தியாவை அந்நிய நாடுகளிடமிருந்து அல்ல, ஆளத் தெரியாமல், பன்னாட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விடமிருந்து காப்பதுதான் இந்தியாவின் இறையாண்மை யையும், ஜனநாயகத்தையும் மக்களின் நலனையும் காக்க ஒரே தீர்வாகும்.





