ஆரியக்கூத் தாடிவந்து தமிழ்மொழியின் நாடகங்கள் அழித்து விட்டார்!
வேராகும் சாமபேதம் இசைக்கென்று தமிழிசையை வீழ்த்தி விட்டார்!
ஓராமல் தமிழ்மக்கள் ஆட்டுமந்தை போலெனவே ஒப்பி விட்டார்!
தீராத ஆரியத்தின் பகையறியாத் தமிழ்மகனே தூங்கி டாதே!
முத்தமிழின் இருபிரிவாம் இசைத்தமிழும் நாடகமும் முழுத ழித்தார்,
முத்தமிழா இசையெங்கே? கூத்தெங்கே? இரண்டிலல்லா மூளி யென்றார்!
கத்துகடல் போல்பரந்து விரிந்துள்ள இயற்றமிழைக் கட்ட ழிக்க,
எத்தர்கள் சத்தில்லா இந்தியினை மொழியென்றே ஏவி யுள்ளார்!
மும்மொழிக் கல்விதான் புதுமையென்றும் செவியெல்லாம் இசைக்கு மென்றும்,
கும்மாளம் போடுகின்ற குள்ளநரி ஆரியத்தின் கூட்டத் தோடு
நம்மொழியைப் பகைக்கின்றார், இருமொழியைக் கட்டழித்துப் பையப் பைய
ஆம், அப் பத்தைப் பகிர்ந்த குரங்கைப்போல் அறியீர் நீவிர்!
இலக்கணத்தை அழித்துவிட்டால் இன்றமிழும் அழிந்திடாதோ? இம்மி கூடக்
கலக்கமின்றி வாலறுந்த நரியோடு கலந்தொன்றாய்க் கத்து கின்றீர்!
குலங்கெடுக்கும் பார்ப்பனர்கள் பசப்புகின்ற சொல்நம்பிக் கொம்பை நீட்டிக்
கலப்படத்தைத் தமிழினிலே செய்யாதீர்! குயில்பழிக்கும் காக்கை யாவீர்!
செவியெல்லாம் இனிக்கின்ற ஒலிநயத்தைக் கசப்பென்னும் செவிடர் நீங்கள்!
சுவைக்கரும்பு கசப்பென்பீர்! மூங்கிலினைக் கடிப்பதுவே சுவையென் கின்றீர்!
உவப்போடு மயில்விரிக்கும் தோகையதன் ஒழுங்கொக்கும் தமிழின் பாடல்
சிவுக்கென்று கட்டவிழ்ந்து வாயிலெலாம் சிதறுகின்ற துடைப்பம் உம்பா!
மொழியழிந்தால் முன்னோர்கள் செவியினிக்கப் பாடிவைத்த இலக்கி யங்கள்,
அழித்திட்ட குடில்களெனக் கரியாகும் அதன்பின்னர் சீ! சீ! நீவிர்,
விழிப்புறவே மாட்டீர்கள், எமக்குண்டே எம்மிடத்தில் அறிவைக் கற்று
மொழிமானம் கொள்ளுங்கள், உம்மொழியை, எனப்பகைவர் காதில் சொல்வீர்!
எவ்வளவு பட்டாலும் ஏனடாநீ உணர்வின்றி இருக்கின் றாயே!
ஒவ்வா பகைசொல்லும் சொல்கேட்டு மடமையினால் உறவு கொண்டாய்!
கவ்வவரும் புலிவாயைக் கிழிப்பவன்நீ! கழுதைகண்டா கால்ந டுக்கம்?
சிவ்வென்று சிறகைவிரி வல்லூறாய்! காக்கையல்ல, சீறிப் பாய்நீ! ª





