Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அவரங்கசீப் மதவெறியாரா? மனித நேயரா ?

துருக்கிய, பாரசீக, மங்கோலிய, தைமூர் இனத்தைச் சேர்ந்த “பாபர்” முதலாம் பானிபட் போரில், இங்கு ஆண்டு வந்த இப்ராகீம் லோடியை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். 1712 வரை பெரும் பேரரசாக இவர்கள் ஆட்சி இருந்தாலும் 1857இல் தான் ஆங்கிலேயர்களால் இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. மிகவும் புகழ்பெற்ற இந்தப் பேரரசு இந்த மண்ணில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாபருக்குப்பின் ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகிய பேரரசர்களுக்குப் பின் வந்த பேரரசர்தான் “அவ்ரங்கசீப்”. முகலாயர்களின் ஆறாவது பேரரசர் இவர். இவர் ஆட்சி ஏறக்குறைய இந்தத் துணைக் கண்டம் முழுதும் பரவியிருந்தது. இவர் 1658 முதல் 1707 வரை ஆட்சியிலிருந்தார். 88 வயது வரை (1618-1707) உயிர் வாழ்ந்த முகலாயப் பேரரசர் இவர். மிகவும் பரந்து, விரிந்த முகலாயப் பேரரசு, இவர் காலத்தில் உருவானது.

இவரது ஆட்சியின் பிற்பகுதியில் மாராட்டியத்தில் சிவாஜி தலைமையில் ஆட்சி அமைந்தது. சிவாஜியின் ஆட்சியில் “பேஷ்வாக்கள்” என்ற சித்பவன் பார்ப்பனர்கள் முழுமையாக ஆட்சியை பின்னணியில் இருந்து நடத்தினர். சிவாஜியின் பேரன் இரண்டாம் சாகுஜியைக் கொன்று பாஜிராவ் பேஷ்வா, பார்ப்பன ஆட்சியை நிறுவினார். சிவாஜியும், பேஷ்வாக்களும் முழு பேஷ்வா ஆட்சியையே நடத்தினர். அவுரங்கசீப்பை, சிவாஜி எதிர்த்த காலகட்டத்தில் பார்ப்பனர் ஆட்சியை நிலைநாட்ட, அவ்ரங்கசீப்பைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அது இன்றளவும் நிலை பெற்றுள்ளது.

பேஷ்வாக்கள் என்ற பரம்பரையில் வந்த சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது தான் R.S.S. அமைப்பு. அவ்ரங்கசீப்பின் மேல் இருந்த வெறுப்பு அவர்களுக்கு இன்னும் மாறவில்லை.  R.S.S.இன் அரசியல் வடிவமான BJP ஆட்சியில் டில்லியில் இருந்த “அவ்ரங்கசீப் மார்க்”, (Aurangaship Marg) அப்துல் கலாம் சாலையாக மாற்றப்பட்டது. மராட்டியத்தில் இருந்த “அவ்ரங்கபாத்” என்ற நகர் “சம்பாஜி நகர்” (இவர் சிவாஜியின் மூத்த மகன், மராட்டியத்தின் இரண்டாம் அரசர்) என்று மாற்றப்பட்டது. உண்மையில் “அவ்ரங்கசீப்” யார்? கொடுங்கோலனாகச் சித்திரிக்கப்பட்ட அவரின் உண்மை முகம் என்ன? இதைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முகயல்தீன் முகம்மது என்ற அவ்ரங்கசீப் தான் முகலாயப் பேரரசின் ஆறாவது பேரரசர் (1618-1707). ‘அவ்ரங்க சீப்’ என்றால் “அரியணையின் ஆபரணம்” என்று பொருள். முதலாம் “ஆலம்கீர்”என்ற பட்டத்துடன் பதவியில் அமர்ந்த இவர் அரியணையைப் பிடிக்க ஒரு பெரும் போராட்டமே நிகழ்த்தினார். ஆட்சியைக் கைப்பற்றிய அவ்ரங்கசீப் 1658 முதல் 1707 வரை (தன் இறப்பு வரை) ஆட்சியில் இருந்தார். பேரரசர் ஷாஜஹானுக் கு நான்காவது மகனாகப் பிறந்தவர் இவர். ஒவ்வொரு மகனையும் ஷாஜஹான் தன் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளுக்கு ஆளுஞர்களாக நியமித்திருந்தார்.தன் முதல் மகன் தாராசிக்கோவை தனக்கு அடுத்த பேரரசராக ஷாஜஹான் அறிவித்தார்.அதை அவ்ரங்கசீப் ஏற்றுக் கொள்ள வில்லை.தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைத்தார். அவ்ரங்கசீப்பின் தங்கை சகாதாரா, தந்தையைக் கவனித்துக் கொள்ள பேரரசரால் அனுமதிக்கப்பட்டார். தன் மூத்த அண்ணன் தாராசிக்கோவைக் கொன்று அவரது துண்டித்தத் தலையை ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்த தந்தைக்கு அனுப்பி வைத்தார். 1658இல் தன்னைத் தானே பேரரசராக அறிவித்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்த அவ்ரங்கசீப் தன்னுடைய மற்ற சகோதரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கொன்றார். அவர் காலத்தில் ஏறத்தாழ இந்திய துணைக் கண்டம் முழுவதும் முகலாயப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது. இந்தியாவை ஆண்ட எந்தப் பேரரசர் காலத்திலும் இவ்வளவு பரந்த பேரரசு இருந்ததில்லை.

கி.பி. 1707இல் அவ்ரங்க சீப் மரணமடைந்தார்.அவர் உடல் மஹாராஷ்ட்ராவில் உள்ள குல்தாபாத் என்னும் ஊரில் அடக்கம் செய்யப் பட்டது என்பது உங்களுக்குத தெரியுமா?

வரலாற்று ஆசிரியர்கள் அவ்ரங்கசீப்பைப் பற்றி பலவாறு தாக்கிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் மறைக்க முடியாத பல வரலாற்றுக் குறிப்புகளும் அவரைப் பற்றி உண்டு. இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். தன் கையாலே இஸ்லாமியர்களின் வேதமான
“குர்ஆன்” எழுதியவர். இஸ்லாமியர்களுக்கு விதிக்கப்பட்ட அய்ந்து கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றியவர் அவர். தான் அணியும் தொப்பியைக்கூட தன் கையாலே தைத்து பயன்படுத்தியவர் அவ்ரங்கசீப். ஆடம்பரங்களை வெறுத்தவர். பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவரே அவர் கைப்பட உயில் எழுதி வைத்தார். அவரது எளிய வாழ்க்கையை விளக்கும் வண்ணம் அந்த உயில் இருந்தது.

அவ்ரங்கசீப் தன்கையாலேயே எழுதிய உயிலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார், “நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய், இரண்டணாக்கள் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன.அதைக் கொண்டு என் உடல் மீது போர்த்த வேண்டிய “கஃபன்” துணியை வாங்கிக் கொள்ளுங்கள். என் கையால் திருக்குர்ரானை எழுதிப் பிரதியெடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப் பெற்ற ரூபாய் முன்னூற்று அய்ந்து என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்து விடுங்கள். என் தலையை எதைக் கொண்டும் மூடாமல் திறந்து வைத்து விடுங்கள். இறைவன் எனக்குக் கருணை காட்ட அது உதவும். என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்” என்பதே அந்த உயில். முகலாயப் பேரரசர்கள் அனைவரும் ஆடம்பரமாகவே வாழ்ந்த நிலையில் அவ்ரங்க சீப் மட்டும் எளிமையாக வாழ்ந்தார்.

இப்படிபட்ட அவ்ரங்கசீப்பை ஒரு கொடுமைக்கார மன்னனாகவே நமக்கு வரலாற்று நூல்கள் அறிமுகம் செய்துள்ளன.ஆனால், உண்மை வேறு விதமாகத்தான் இருந்தது. மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர் தன் மணி மகுடத்தில் கூட ஒரே, ஒரு சிறிய கல்லைத்தான் பொறித்திருந்தார். டில்லிக்கும், ஆக்ராவுக்கும் அருகே ஒரு துண்டு நிலத்தை அவர் தனக்கென வாங்கினார். அதில் ஆட்களை வைத்து விவசாயம் செய்தார்.அந்த செலவுகளையும் கூட குர்ரானை தன் கைப்பட எழுதி, விற்ற காசில் செலவு செய்தார். நிலமும் அவர் சொந்தக் காசில்தான் வாங்கினார். அந்த நிலத்திலிருந்து வந்த வருமானத்தில்தான் அவர் உணவுக்கே செலவழித்தார். தன் சொந்த பயன்பாட்டுக்கு என்று அரசாங்கப் பணத்தை அவர் பயன்படுத்தவே இல்லை. அவர் புலால் உணவை அறவே தவிர்த்தார். சைவ உணவையே உட்கொண்டார். மாம்பழம் அவருக்கு மிகவும் பிடித்த பழம். இஸ்லாமியர்களின் அய்ந்து கடமைகளில் ஒன்றான அய்ந்து நேரத் தொழுகையைத் தவறாமல் கடைப் பிடித்தார். போர்க்களத்தில் இருந்த காலத்திலும் அவர் தொழுகையை நிறுத்தியதில்லை. ஒரு நாளில் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கும் வழக்கமுடையவர் அவ்ரங்கசீப். இரவில் தரையில்தான் படுப்பார். மேலே ஒரு புலித்தோலைத் தான் போர்த்திக் கொண்டு தூங்குவாராம்.

அரண்மனையிலும், மற்ற அரசாங்கக் கட்டடங்களிலும் இருந்த தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்தப் பொருள்களை நீக்க உத்தரவிட்டார். தன் மேஜை மீதிருந்த தங்க மைப்புட்டியை மாற்றிவிட்டு கல்லாலான மைப்புட்டியை வைத்துக் கொண்டாராம்.

பாபர் காலத்தில் இருந்து ஷாஜஹான் காலம் வரை இசையிலும், பாடல்களிலும் மற்ற கலைகளிலும் அதிகளவு நாட்டம் கொண்டிருந்தனர். அவர்கள் அவையில் இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் எப்பொழுதும் பேரரசர்களை மகிழ்ச்சிப் படுத்தினர். அவ்ரங்கசீப் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் இவை அனைத்தையும் தடை செய்து விட்டார். ஆனால் அவர்களுக்கு அரசு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தவில்லை.தன்பேரரசின் கீழ் உள்ள எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவ்ரங்கசீப் கட்டளையிட்டார். தன் நேரடி நிருவாகத்தில் இருந்த கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்.

(தொடரும்…)