சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் 24.7.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, அந்த வழக்கிலிருந்து விலகி விட்ட வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ‘சம்மன்’ கொடுத்து நீதிமன்றத்திற்கு மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அழைத்ததாகவும், அவ்வழக்கில் தற்போது தான் வாதாடவில்லை என்பதை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தெரிவித்த பிறகு, “இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி, “ஜாதி ரீதியாக நான் தீர்ப்பு வழங்குவதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
இதன் பின்னணியில், கடந்த மாதத்தில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி அனுப்பிய புகார்க் கடிதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வழக்குரைஞரை நேரில் அழைத்து மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உயர்நீதிமன்றப் பதிவாளர் மூலம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுக்கலாமா? உயர்நீதிமன்றத்தின் நிருவாகப் பொறுப்பில் இருக்கக் கூடிய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அனுமதியோடு இது கொடுக்கப்பட்டிருக்கிறதா?
ஜனநாயகத்தில் நீதிமன்றங்கள் தான் மக்களின் கடைசி நம்பிக்கை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நீதிபதிகள் பதவியேற்கும் போது ஏற்கும் உறுதி மொழியில், சொந்த விருப்பு- வெறுப்பு இல்லாமல் அவர்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தத்துவமாகும்.
ஆனால், குறிப்பிட்ட மாண்புமிகு நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அதன் மதுரை கிளையிலும் அளித்த பல தீர்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் சார்பும், ஜாதியப் பாதுகாப்பு உணர்வும் இருப்பதாக நாங்களே பலமுறை பொது மன்றங்களில் தெரிவித்துள்ளோம்.
ஒருமுறை தேவை இல்லாமல் தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் திருமணத்தைப் பற்றிப் பேசி கொச்சைப்படுத்தினார். பகுத்தறிவுவாதிகள்பற்றியும் கிண்டலடித்திருக்கிறார்.
பெரியார் என்பவர் இந்திய அரசால் தாமிரப் பட்டயம் அளித்து கவுரவிக்கப்பட்டவர், நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டு பெருமைப்படுத்தப்பட்ட தலைவர்.
தமிழ்நாட்டின் தந்தை என்று கருதப்படக் கூடியவர். இதே நீதிமன்றத்தில், மாண்பமை நீதிபதி ஒருவரால் “இந்தியாவுக்கு எப்படி மகாத்மா காந்தி அவர்கள் தந்தையோ, அப்படி தமிழ்நாட்டுக்கு தந்தை பெரியார்” என்று வர்ணிக்கப்பட்டவர். சமூக நீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டு நன்றி செலுத்தப்பட்டு இருப்பதைப் போலவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரிய ஒப்பற்ற தலைவர். அப்படிப்பட்ட கோடானுகோடி மக்களுக்கான தலைவரை, சிறிதும் தொடர்பற்ற ஒரு வழக்கில், தான் வழங்கிய தீர்ப்பில் கொச்சைப்படுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறோம்.
அது மட்டுமல்லாமல், இன்றைய அறிவியல் யுகத்தில், கரூரில் பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையில் பார்ப்பனர் அல்லாதார் உருளும் மனிதத் தன்மையற்ற நிகழ்ச்சி தடை செய்யப்பட்டபோது, அதன்மூலம் சட்டம் – ஒழுங்கைச் சரிசெய்ய அரசு முயற்சித்த போது, அதற்கு எதிராக மாண்பமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பை சார்பற்றது என்று எப்படி கூறுவது?
இந்தியாவைப் பீடித்த பெரும் சமூக நோயான ஜாதி-தீண்டாமை ஒழிப்புக்காக தமிழ்நாடு தி.மு.க. அரசால் அரும்பாடுபட்டுக் கொண்டுவரப்பட்டது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டமாகும்.
அது தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் மாண்பமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் ஒரு சார்பு நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த தீர்ப்புகளும் உண்டு.
மற்றொரு சமூகநீதி சம்பந்தமான வழக்கில் வாதாட வந்த மூத்த வழக்குரைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்களைப் பார்த்து, மாண்பமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநான், உரிய மாண்பை மீறி விளித்ததும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய நீதிபதியின் நடத்தையாகும்.
அது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்திப் பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், எப்போதும் தன்னுடைய ஜாதியைப் பெருமையாகப் பேசும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுகிறார். ஓரிரு நாளில் அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு உயர்நீதிமன்றத்தை நாடுகிறார்.
வழக்கு வேறொரு நீதிபதியிடம் விசாரணைக்கு வருவதற்கு முன்னாலேயே மாண்புமிகு நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் மனைவி, சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்றை விடுத்து, ஜாதி உணர்வுடன் பேசிய அந்தப் பெண்ணுக்குப் பட்சாதாபம் தேடிக் கொடுத்த நடைமுறை சரியானதா? அதை நீதிமன்றங்கள் ஏற்குமா?
நீதிபதிகளாக நியமிக்கப்படும் எவருக்கும் தனிப்பட்ட கொள்கைகள் இருக்கலாம். அது அவரவர் உரிமையாகும். ஆனால், நீதிபதியான பிறகு, அந்தக் கொள்கைகள் நீதிமன்றத் தீர்ப்புகளில் பிரதிபலிக்க விடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருப்பதை, இங்குச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
இப்படியான பலரும் அறிந்த ஒரு பொதுப் பிரச்சினைக்கு அரசமைப்புச் சட்டப்படியாக வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திற்கு ஒரு வழக்குரைஞர் புகார் அனுப்பினால், அவரை நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் அழைத்து மிரட்டுவது போல் பேசுவது ஏற்கத் தக்கதா?
தன் மீதான வழக்கை, தன்னைப் பற்றிய வழக்கை, தானே விசாரித்து நீதி வழங்க முடியுமா? அந்த விசித்திர நீதிப் போக்கு நீதிமன்ற நீதிக்கு உகந்ததா? இதனை, சட்ட நெறிமுறைகள், நடைமுறைகள் ஏற்குமா?
நீதிமன்றத்தினுடைய மாண்புகள் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கக் கூடாது என்னும் பொது நோக்கோடு இதனை எழுதுகின்றோம்.





