1.கே: ஆர்.எஸ்.எஸ். ஆதரவு செயல்பாடுகளை வெளிப்படையாகச் செய்யும் உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அவர்கள்மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாதா? அவர் நீதிமன்ற மாண்புகளைத் தொடர்ந்து மீறி நடப்பதை அனுமதிக்கலாமா?
க. காசி, தூத்துக்குடி.
ப: அதற்கொரு பின்னணி பலம்(லாபி) உள்ளது. அது அம்பலமாகும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது!
2.கே: ‘நீட்’ குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை விரைந்து நடத்தி தீர்ப்புப் பெற வாய்ப்புண்டா? ஆண்டுக்கணக்கில் அவ்வழக்கைக் கிடப்பில் போடுவது எந்த அடிப்படையில்?
– செ. ராம், வேளச்சேரி.
ப: நம் நாட்டு நீதிமன்ற நிருவாக ஓட்டைகள் சரிவர அடைக்கப்படுவது வரை இம்மாதிரி இக்கட்டுகள் தவிர்க்க முடியாதவையே!

3.கே: ஆகம விதிப்படியான கோயில்களில் அனைத்து ஜாதியினரும் தற்போதைய நிலையில் அர்ச்சகராக முடியுமா? அப்படியென்றால் அதற்குத் தீர்வு என்ன?
– த. கார்த்திக், ஆரணி.
ப: தீர்வு இல்லாப் பிரச்சினைகளே உலகில் இல்லை!- முன்பு பல நீதிமன்றக் குழப்பங்கள் முடிவுக்கு வந்தது போல இதுவும் விரைவில் முடிவுக்கு வருவது உறுதி!
4.கே: குற்றம்சாட்டப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவர்மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத்துறையின் செயல் சட்டப்படி சரியா? நீதிமன்றம் அதை ஏற்குமா?
– ப.தாமரைக்கண்ணன், கரூர்.
ப: உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் பி.ஆர்.கவாய் அமர்வு தந்த தடையாணையே (stay) இதற்குச் சரியான பதிலாகும்!

5.கே: நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?
– ப. ஜானகி, புதுச்சேரி.
ப: ஒன்றியத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஓட்டுப் போட்ட மைனாரிட்டி அரசு மாற்றம் அடையும்போது விடிவு ஏற்படும்! மாற்றம் என்பதுதான் மாறாதது! மறவாதீர்!
6.கே: நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம் அரசியலமைப்புச் சாசனத்திற்கு எதிரானது என்று நிரூபித்தால் மட்டுமே அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ள கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– கே.பாபு, சென்னை.
ப:அது குறிப்பிட்ட வழக்கின் தனித்தன்மைகளைப் பொறுத்து அவ்வப்போது வழக்கு நிலைப்பாடு மாறும் என்பதே உச்சநீதிமன்றத்தின் போக்கைப் பொறுத்திருக்கிறது.
7.கே: ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், மருத்துவர் ராமதாசும் முதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கை பற்றித் தங்கள் கருத்து என்ன?
– த.வள்ளி, சென்னை.
ப: ‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்’ என்ற சொலவடைதான் ஞாபகத்திற்கு வருது!





